"கணபதி பாப்பா மோரியா"! ஹைதராபாத்தில் ரூ.2.32 கோடிக்கு ஏலம் போன விநாயகர் மெகா லட்டு
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், பந்தலகுண்டா ஜாகிர் எனும் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி படைக்கப்பட்ட லட்டு இந்த ஆண்டு அதிகபட்சமாக ரூ 2.32 கோடிக்கு ஏலம் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே லட்டு கடந்த ஆண்டு ரூ 1.87 கோடிக்கு ஏலம் போனது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள பந்தலகுண்டா ஜாகிர் என்ற பகுதியில் விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு மெகா லட்டு ஒவ்வொரு ஆண்டும் தயாரிக்கப்படுகிறது. இந்த லட்டு கடந்த ஆண்டு ரூ 1.87 கோடிக்கு ஏலம் போனது.
இந்த ஆண்டு ரூ 2.32 கோடிக்கு விலை போயுள்ளது. அது போல் ராயதிர்கம் பகுதியில் தயாரிக்கப்பட்ட விநாயகர் லட்டு ரூ 51 லட்சத்திற்கும் பாலாபூர் பகுதியில் விநாயகருக்கு படைப்பதற்காக தயாரிக்கப்பட்ட லட்டு ரூ 35 லட்சத்திற்கும் ஏலம் போனது.
ஹைதராபாத்தில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்வு, அதாவது விஜர்சனம் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த சிலை கரைப்பலு நிகழ்வு நேற்று தொடங்கியது. கிட்டத்தட்ட 40 மணி நேரம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஹைதராபாத்தில் உள்ள ஹூசைன் சாகர் ஏரியில் கிட்டதட்ட 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
இந்த விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு ஹைதராபாத் போலீஸார் 30 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விநாயகரை சுமந்து வரும் ஒவ்வொரு வாகனங்களுக்கும் கியூஆர் கோடு அளிக்கப்பட்டுள்ளது.
250-க்கும் மேற்பட்ட தற்காலிக சிசிடிவி கேமராக்கள் 9 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அது போல் பெண்கள் பாதுகாப்பை கருதி மகளிர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். விநாயகர் சிலைகளை கொண்டு வரும் வாகனங்கள் 100 மீட்டர் இடைவெளியில் நிறுத்தப்படுகின்றன.
இவை கரைக்கப்படும் ஹுசைன் சாகர் ஏரியின் சுற்றுப்புறத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹுசைன் சாகர், டேங்க் பண்ட், என்டிஆர் மார்க் பகுதிகளில் விநாயகர் சிலைகள் அதிகளவில் கரைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வையொட்டி நாளை காலை 10 மணி வரை ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அது போல் தனியார் பேருந்துகள், லாரிகள் நகருக்குள் நுழைய அனுமதியில்லை.
மக்கள் கூட்டம் அதிகமான நேரங்களில் அரசு பேருந்துகள் மேதிப்பட்டினம், கூகட்பள்ளி, செகந்திராபாத், உப்பல், தில்ஷுக் நகர், நாராயணகுடா வரை மட்டுமே அனுமதிக்கப்படும். செகந்திராபாத் ரயில் நிலையம் செல்லும் பயணிகள் பேகம்பெட், பாரடைஸ் வழியை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications