"சொன்னதை செய்வோம்.. செய்வதை சொல்வோம்".. பக்கா திமுக போல உருமாறும் ராகுல் தேர்தல் பிரசார முழக்கம்!
ஹைதராபாத்: தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த "சொன்னதை செய்வோம்.. செய்வதை சொல்வோம்" என்ற முழக்கத்தை பின்பற்றி தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்தி மேற்கொண்டார்.
தெலுங்கானாவில் நேற்றும் இன்றும் ராகுல் காந்தி தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் தேர்தல் பிரசாரத்தில் இணைந்துள்ளார்.

தெலுங்கானா பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: ராஜஸ்தானில் இலவச சிகிச்சை என்று நாங்கள் உறுதியளித்தோம், இன்று அங்கு ரூ.25 லட்சம் வரை சிகிச்சை இலவசம். சத்தீஸ்கரில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தோம், இன்று அங்கு நெல்லுக்கு அதிக விலை கிடைக்கிறது. கர்நாடகாவில் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம். ஒவ்வொரு மாதமும் பெண்கள் மற்றும் விவசாயிகளின் கணக்குகளுக்கு பணம் வருகிறது. நான் இங்கே தெலுங்கானாவில் சொல்கிறேன் - உங்கள் உரிமை எதுவோ, அதை நாங்கள் உத்தரவாதத்துடன் தருகிறோம்.
கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என எதுவாக இருந்தாலும் சரி.. எதைச் சொன்னாலும் செய்வோம்.

சித்தாந்த மோதல்: பாஜகவுடன் சித்தாந்த சண்டை உள்ளது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டோம் என்று தெரிந்ததால்தான் எங்கள் தலைவர்கள் மீது வழக்குகள் போடுகிறார்கள். ஆனால், உங்கள் முதல்வர் சந்திரசேகர ராவைக் கட்டுப்படுத்த முடியும் என்பது பாஜகவுக்குத் தெரியும். நீங்கள் எங்களை ஆதரியுங்கள், காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பாஜகவை தோற்கடிக்கும்.

சமூக நீதி: தெலுங்கானா மக்களின் கனவு, சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதே. கேசிஆர் அரசின் 18 அமைச்சர்களில் 3 அமைச்சர்கள் முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை 50% க்கும் அதிகமாக உள்ளது. ஆனால் அவர்களின் எண்ணிக்கை அமைச்சகத்தில் வெறும் 3 மட்டுமே. இது தான் முழு தேசத்தின் யதார்த்தம், ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேசும்போது மவுனம் காக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி சமூக நீதியை வழங்குவார்கள்?

பொய்யான வாக்குறுதி: பாஜக அரசு தேர்தல் நேரத்தில் பெரிதாகப் பேசிவிட்டு மறந்துவிடுகிறது. பழங்குடியினர் பல்கலைக் கழகம் கட்டுவேன், உருக்கு ஆலை அமைப்பேன், தோட்டக்கலைப் பல்கலைக் கழகம் அமைப்பேன் என்று பிரதமர் மோடி கூறியும் எதுவும் கட்டப்படவில்லை. எனவே வாக்காளர்கள் புத்திசாலித்தனமாக வாக்களிக்கவும். உங்களுக்காக எந்தக் கட்சி உழைத்திருக்கிறது என்பதைப் பார்த்து வாக்களியுங்கள். இந்தத் தேர்தலில் உங்கள் வாக்கு உங்கள் குழந்தைகளின் நல்ல எதிர்காலத்தை கொடுக்கும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வறு ராகுல் காந்தி கூறினார். முன்னதாக தெலுங்கானா மாநிலம், முலுகுவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ராமப்பா கோயிலுக்கு ராகுல் காந்தி, சகோதரி பிரியங்கா காந்தியுடன் வழிபாடு நடத்தினார்.












Click it and Unblock the Notifications