ஆளுநர் Vs முதல்வர்: கேசிஆரை வாய் நிறைய அண்ணானு அழைத்த தமிழிசை.. திடீர் மோதல் ஏன்? நடந்தது என்ன?
ஹைதராபாத்: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் முதல்வர் சந்திரசேகரராவுக்கும் இடையே எப்போது முதல் மோதல் வெடித்தது என்பதை பார்ப்போம்.
தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் கடந்த 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவர் அப்பதவிக்கு வந்து இன்றுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இதையொட்டி ஆளுநர் மாளிகையில் தமிழிசை தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் செயல்பாடுகளையும் நடவடிக்கைகளையும் விமர்சித்து பேசியுள்ளார்.
நீட்டால் மாணவி தற்கொலை.. மத்திய அரசே காரணம்! ஆளுநர் ரவி என்ன சொல்லப்போகிறார்? அன்புமணி ஆவேசம்
பெண் ஆளுநர்
அவர் ஒரு பெண் ஆளுநராக தான் அவமதிக்கப்பட்டதாக வருத்தத்துடன் தெரிவித்த தமிழிசை, பெண் ஆளுநர் பாரபட்சமாக நடத்தப்பட்டதை இந்த மாநிலத்தின் சரித்திரம் எழுதும் என குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் அலுவலகத்திற்கான மதிப்பும் மரியாதையும் இருக்க வேண்டும். ஆனால் அது தெலுங்கானாவில் இல்லை என பேசியிருந்தார்.
பாஜக அரசு இல்லாத மாநிலங்கள்
பாஜக அரசு இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இப்படித்தான் முட்டல் மோதல் நடைபெறுகிறது. உதாரணம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி- ஆளுநராக இருந்த ஜெகதீஷ் தன்கர், புதுவையில் முதல்வராக இருந்த நாராயணசாமி- ஆளுநராக இருந்த கிரண் பேடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலுக்கும் ஆளுநருக்கும் கூட பிரச்சினை இருந்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின்
அது போல் தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் இடையேயும் மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தெலுங்கானா முதல்வர் கேசி சந்திரசேகர ராவுக்கும் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனுக்கும் இடையே எப்போது மோதல் ஏற்பட்டது என்பதை பார்ப்போம். ஆரம்பத்தில் இருவருக்கும் சுமூகமான போக்கு இருந்தது.
ஆளுநர் மாளிகை
ஆனால் ஆளுநர் மாளிகையின் வெளியே புகார் பெட்டியை தமிழிசை வைத்திருந்தது, கேசிஆருக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் குடியரசுத் தினத்தின் போது தேசியக் கொடி ஏற்றும் உரிமை தமிழிசைக்கு கொடுக்கப்படவில்லை என தெரிவித்திருந்தார். அது போல் சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுவதும் தமிழிசைக்கு மறுக்கப்பட்டதாகவே கூறப்பட்டது. எனினும் புகார் பெட்டியை தமிழிசை அகற்றியதாக தெரிகிறது. இந்த நிலையில் தமிழிசை சவுந்திரராஜனின் தாய் கிருஷ்ணகுமாரி கடந்த ஆண்டு காலமானார்.
தமிழிசையின தாய் இறப்பு
அவர் இறக்கும்போது தமிழிசையுடன் ஹைதராபாத்தில் ஆளுநர் மாளிகையில்தான் வசித்து வந்தார். எப்போதும் கேசிஆரை தமிழிசை அண்ணா என்றே அழைப்பார். அப்படியுள்ள சூழலில் தமிழிசையின் தாயின் இறப்புக்கு தெலுங்கானா முதல்வர் கேசிஆர் போகவும் இல்லை இரங்கலும் தெரிவிக்கவில்லை. இதை தமிழிசையே மனம் வருந்தி பேட்டி அளித்திருந்தார்.
ஆளுநர் மாளிகையில் புகார் பெட்டி
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஆளுநர் மாளிகையின் வெளியே புகார் பெட்டியை தமிழிசை மீண்டும் வைத்திருந்தார். இது மீண்டும் கேசிஆருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. "ஆளுநர் வேலையை செய்யாமல் பாஜக தலைவர் போல் தமிழிசை செயல்படுகிறார்" என தெலுங்கானா ராஷ்ட்ரீய கடசி தலைவர்களும் விமர்சனம் செய்திருந்தனர். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும நிகழ்ச்சியில் முதல்வர் கேசிஆர் பேசுகையில் குறுக்கு நோக்கத்துடன் ஆளுநர்கள் செயல்படுவதாக தமிழிசையை மறைமுகமாக விமர்சித்திருந்தார்.