அஸ்ஸாமில் மீண்டும் இனமோதல்- போடோ தீவிரவாதிகள் தாக்குதலில் 2 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 10 பேர் பலி!
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தின் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு கோக்ராஜ்கர் மாவட்டத்தில் போடோ பழங்குடி இனத்தவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பெரியளவிலான மோதல் நடந்தது. இந்த நிலையில் மீண்டும் அங்கு மோதல் வெடித்துள்ளது.
கோக்ராஜ்கரின் துல்சிபில் என்ற பகுதியில் நேற்று இரவு போடோ தேசிய ஜனநாயக முன்னணி என்ற ஆயுதம் தாங்கிய தீவிரவாத குழுவினர் முஸ்லிம்கள் வாழும் கிராமத்தில் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர்.
அதற்கு முன்னதாக அதே பகுதியில் மூன்று முஸ்லிம்களை போடோ தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10 அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலியானோரில் 2 பேர் குழந்தைகள், 4 பேர் பெண்கள். போடோ தீவிரவாதிகளின் அடுத்தடுத்த தொடர் தாக்குதல்களால் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆயிரம் துணை ராணுவப் படையினரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்குமாறு மத்திய அரசை அஸ்ஸாம் மாநில அரசு கேட்டுக் கொண்டது.
தற்போது பதற்றமான பகுதிகளில் துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பாஜகவுக்கு போடோ இயக்கம் ஆதரவு
இதனிடையே போடோலாந்து மக்கள் முன்னணி என்ற மற்றொரு இயக்கம் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் மூத்த தலைவர் பிரமில்லா ரானி பிரம்மா கூறுகையில், அஸ்ஸாம் மாநிலத்தின் 14 லோக்சபா தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியால் 5 இடங்களைத்தான் வெல்ல முடியும். அந்த அளவுக்கு மாநில அரசு மோசமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார். இந்த போடோ மக்கள் முன்னணி கோக்ராஜ்கர் லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications