ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 1000 அதிமுக தொண்டர்கள் பெங்களூர் வருகை: உளவுத்துறை தகவல்
பெங்களூர்: தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 1000 பேர் பெங்களூர் வந்ததாக பெங்களூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகத்தில் இருந்து அதிமுகவினர் பெங்களூரில் குவிந்திருந்தனர்.
குறிப்பாக ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள மத்திய சிறை வளாகத்தை சுற்றிலும் குவிந்திருந்தனர். ஒசூரில் இருந்து பெங்களூர் நகருக்குள் வரும் தேசிய நெடுஞ்சாலையின் அருகே பரப்பன அக்ரஹாரா சிறை அமைந்துள்ளதால், தமிழகத்தில் இருந்து அங்கு வருவது தொண்டர்களுக்கு எளிதான காரியமாக இருந்தது.
ஏனெனில் பெங்களூரில் இதய பகுதிக்குள் தொண்டர்கள் வர வேண்டிய தேவையில்லை என்பதால் டிராபிக் பிரச்சினை, போக்குவரத்து போலீசாரின் கட்டுப்பாடு ஏதுமின்றி எளிதில் கார்களில், பஸ்களில் வந்து சிறை வளாகத்தில் குவிந்து வந்தனர் தொண்டர்கள். இதுகுறித்து கர்நாடக உளவுத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது "தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 1000 பேர் வர வேண்டும் என்று 'கட்டளை' பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதையேற்று பெங்களூரில் அதிமுகவினர் வந்து குவிவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
உளவுத்துறையின் தகவல், பெங்களூர் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. எனவேதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறையை சுற்றிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
சிறை வளாகத்தில் 1500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அதேபோல, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஹைகோர்ட் வளாகத்திலும் போலீசார் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர். பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்களிடம் ஐடி கார்டுகளை காண்பிக்கச் சொல்லி பார்த்த பிறகே, கோர்ட் வளாகத்திற்குள் போலீசார் அவர்களை அனுமதித்தனர்.