8 வருடங்களாக பேசாமல் 11 வயது சிறுமி சமாதியாக முடிவு... போலீஸ் வந்து மீட்டது
ஆக்ரா: உத்திரப்பிரதேசத்தில் கடந்த 8 வருடங்களாக பேசாமல் சமாதி நிலையில் இருந்த 11 வயது சிறுமியைப் போலீசார் மீட்டுள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்றில் விவசாயி ஒருவரின் 5வது மகளாக பிறந்தவர் இந்தச் சிறுமி. அவருக்கு 3 வயதாக இருக்கும் போது, கிராமத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. அப்போது வயல்வெளியில் அமர்ந்து அச்சிறுமி பிரார்த்தனை செய்துள்ளார். சிறிதுநேரத்தில் அங்கு மழை பெய்துள்ளது.
இதனால், அச்சிறுமியை பக்தியோடு பார்க்கத் தொடங்கியுள்ளனர் கிராமத்தார். அதோடு தனக்கு கோவில் எழுப்பும்படியும் கிராம மக்களிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு பேசுவதை அடியோடு நிறுத்தி விட்டாராம் அச்சிறுமி. அதை தொடர்ந்து கிராமத்தினர் அச்சிறுமிக்காக கோவில் கட்டியுள்ளனர். அதில் அமர்ந்து அச்சிறுமி தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு துண்டு பேப்பரில், தான் சமாதி ஆகப்போவதாக தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் அச்சிறுமி. மேலும், தனக்கு பால் மற்றும் புனித நீரால் அபிஷேகம் செய்யும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனைக் கேட்ட அக்கம்பக்கத்து கிராமத்தார் பால் மற்றும் புனித நீருடன் சிறுமியின் கோயிலுக்கு வரத் தொடங்கினர்.
இந்தத் தகவல் போலீசாரின் காதுகளுக்கும் எட்டியது. அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அச்சிறுமியை மீட்டனர்.