பெங்களூருவில் தொடரும் பதற்றம்... 15 ஆயிரம் போலீசார் குவிப்பு
பெங்களூரு: காவிரியில் இருந்து தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து பெங்களூரில் தமிழர்கள் சொத்துக்கள், வாகனங்கள் குறித்து வைத்து தாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுத்ததையடுத்து உச்ச நீதிமன்றம் தலையிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொள்ள முடியாத கன்னட அமைப்பினர் தொடர்ந்து தமிழர்கள் மீதும் அவர்களது சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றன. அடையார் ஆனந்த பவன் உள்ளிட்ட தமிழர்கள் நடத்தும் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்படுகின்றன.
இதனையடுத்து, அங்கு நடந்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு 144 தடை உத்தரவை போட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பெங்களூருவில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000 ஹோம் கார்ட்டுகள் மற்றும் 270 அதிரடிப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.