அதிக மார்க் போடுவதாகக் கூறி 15 வயது சிறுமியை 3 வருடமாக சீரழித்த தலைமை ஆசிரியர்
ரைபூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைமை ஆசிரியரால் 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமி கடந்த மாதம் குழந்தையை பெற்றுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் கண்டகாவ்ன் மாவட்டம் மகதியில் உள்ள பீமாபேடா பகுதியைச் சேர்ந்த 15 வயது பழங்குடியின சிறுமி ஒருவர் ஜகர்பரா அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியில் துவக்கப் பிரிவுன் தலைமை ஆசிரியராக உள்ளவர் ஜகர்பரா மாதவ் நாக்(52). அவர் தனது பள்ளியில் படித்த 15 வயது பழங்குடியின சிறுமியை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தேர்வில் அதிக மதிப்பெண் அளிக்கிறேன் என்று கூறி அவர் சிறுமியை சீரழித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி கர்ப்பமானார். இது குறித்து அறிந்த நாக் பணம் கொடுத்ததுடன் இது பற்றி யாரிடமாவது தெரிவித்தால் அவ்வளவு தான் என சிறுமியையும், அவரது குடும்பத்தாரையும் மிரட்டியுள்ளார்.
நாகின் மிரட்டலுக்கு பயந்து அவர்கள் நடந்த சம்பவம் பற்றி யாரிடமும் தெரிவிக்கவில்லை. கர்ப்பமான பிறகு சிறுமி பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் கடந்த மாதம் சிறுமி குழந்தையை பெற்றெடுத்தார்.
குழந்தை பிறந்த பிறகு அவர் இது குறித்து மகதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள தலைமை ஆசிரியரை தேடி வருகிறார்கள். தலைமை ஆசிரியரை தேடி அவரது சொந்த ஊரான தம்தாரி மாவட்டத்தில் உள்ள சிஹாவாவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.