சத்தீஸ்கரில் நக்சல் IED வெடிகுண்டு தாக்குதல்.. 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த, ஐ.இ.டி வகை வெடிகுண்டு வெடித்து 2 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் சில்கர் கிராமத்தில் ஐ.இ.டி வகை வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். அப்பகுதியில், வழக்கம்போல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போது வெடிகுண்டு வெடித்தது.

இதில் இரண்டு சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். பலியான 2 வீரர்களும், சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு படையின் கோப்ரா பிரிவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெயர்கள் ஆர் விஷ்ணு (35) மற்றும் சைலேந்திரா (29) எனத் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது. விஷ்ணு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்.
மேலும், சில வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் பிற்பகல் 3 மணி அளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளது தெரியவந்துள்ள நிலையில், சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததற்கு அம்மாநில முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய் இரங்கல் தெரிவித்துள்ளார். பஸ்தாரில் நடந்து வரும் நக்சல் ஒழிப்புப் பிரச்சாரத்தின் காரணமாக, விரக்தியில் கோழைத்தனமான செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறியுள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் ஆர்.விஷ்ணு மற்றும் சைலேந்திரா ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவர்களின் தியாகமும், துணிவும் என்றும் நினைவுகூரப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications