டெல்லியில் தினசரி 20 குழந்தைகள் மாயம்!… பாலியல் தொழிலுக்கு விற்கப்படும் அவலம்!!
டெல்லி: தலைநகர் டெல்லியில் தினமும் கிட்டத்தட்ட 20 குழந்தைகள் வரை காணாமல் போவதாகவும் இதில் பாதிக்கும் மேற்பட்டோரை மீட்க முடியாமல் போவதாகவும் டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடந்த மார்ச் 15ஆம் தேதி வரை மட்டும் 1,120 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.
தினசரி ஒரு குழந்தை எங்காவது தொலைந்து போவது வாடிக்கையான நிகழ்வுதான். ஆனால் டெல்லியில் தற்போது அன்றாடம் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை தொலைத்துவிட்டு காவல்நிலையத்தை நாடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண் குழந்தைகள் அதிகம்
புதிய ஆண்டு பிறந்து 3 மாதங்கள் கூட நிறைவு பெறாத நிலையில் கடந்த 15ஆம் தேதி வரை டெல்லியில் 1,120 குழந்தைகள் காணாமல் போயுள்ளன. இதில் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் அதாவது 621 பேர் தொலைந்து போயுள்ளனர்.
பாலியல் தொழில்
கடத்தப்படும் பெண் குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் பாலியல் தொழிலில் இறக்கப்பட்டு விடுகின்றனர். இவர்களை கடத்திச் செல்வதற்காகவே டெல்லியில் பல கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவர்களின் தொடர்புகள் நாடு முழுவதிலும் பரவியிருப்பதால் இவர்களை கண்டுபிடிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காரணம் என்ன?
எனினும், காணாமல் போகும் குழந்தைகளில் சுமார் 50 சதவீதம் பேர் மட்டும் டெல்லி போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். இவர்கள் காணாமல் போவதற்கு, பள்ளிக்குச் செல்ல விருப்பமின்மை, குடும்பத்தகராறு உட்பட பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
மாயமாவது எங்கே
இதில் 10 சதவீதம் பேர் குடும்பத் தகராறு காரணமாகவும் காணாமல் போயுள்ளனர். 11 சதவீதம் பேர் வீட்டுக்கு அருகிலேயும், 9 சதவீதம் பேர் வெளியில் சென்று விட்டு வீடு திரும்பும்போது வழிதவறியதாலும் தொலைந்துள்ளனர்.
அடிக்கு பயந்து
15 சதவீதம் பேர் ஏழ்மையாலும், 11 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்ல விரும்பாமலும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். மேலும் 8 சதவீதம் பேர் பெற்றோர் அடிப்பது மற்றும் திட்டுவதற்கு பயந்தும் எஞ்சியவர்கள் பிற காரணங்களுக்காகவும் மாயமானது தெரிய வந்துள்ளது.
4,166 பெண் குழந்தைகள்
டெல்லி போலீஸார் தரும் புள்ளிவிவரப்படி கடந்த ஆண்டு அம்மாநிலத்தில் 7,572 குழந்தைகள் காணாமல் போயின. இதிலும் 4,166 பெண் குழந்தைகள் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.
12 வயதுக்கு குறைவாக
இதற்கு முன் 2013ஆம் ஆண்டு மட்டும் 5,809 குழந்தைகளும், 2012-ல் 2,686 குழந்தைகளும் காணாமல் போனவர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். காணாமல்போகும் குழந்தைகளில் பெரும்பாலானோர் 8 வயதுக்கும் குறைவாக இருப்பது டெல்லி போலீஸாரை கவலை அடையச் செய்கிறது. ஏனெனில், கடந்த ஆண்டு காணாமல் போய் மீட்கப்படாத 749 குழந்தைகளின் வயது 12-க்கும் குறைவாகும்.
பீதியில் பெற்றோர்கள்
காணாமல் போனவர்களின் புகார்கள் மீது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளை டெல்லி நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இப் புகார்களில் எங்களுடன் இணைந்து 10-க்கும் மேற்பட்ட அமைப்புகள் தீவிர தேடலில் ஈடுபடுகின்றன. இதற்காக ‘ஆபரேஷன் மிலாப் (மீண்டும் இணைவதற்கான நடவடிக்கை)' என்ற பெயருடன் தனி போலீஸ் படை இயங்கி வருகிறது" என்று டெல்லி மாநில காவல்துறை இணை ஆணையர் ரவீந்திரா சிங் யாதவ் தெரிவித்துள்ளார். என்னதான் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் குழந்தைகள் மாயமாகும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.