புது ரூபாய் நோட்டை கையாள 22500 ஏடிஎம்கள் ரெடி.. 1000 ரூபாய் அறிமுகம் இல்லை: ஜேட்லி
டெல்லி: புதிய ரூபாய் நோட்டுக்களை கையாளும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட 22,500 ஏடிஎம்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் அளவிலும், கனத்திலும் மாறுபட்டு இருப்பதால் தற்போதுள்ள ஏடிஎம் மிஷின்களில் மாற்றம் செய்யப்பட வேண்டியுள்ளது. எனவே அந்த நோட்டுக்கள் ஏடிஎம் மையங்களில் கிடைக்கவில்லை. இதனால் மக்கள் நீண்ட கியூவில் ஏடிஎம்கள் மற்றும் வங்கிகள் முன்பு குவிகிறார்கள்.
நாடு முழுக்க உள்ள 2 லட்சம் ஏடிஎம் மையங்களிலும் புதிய நோட்டுக்களுக்கு ஏற்ப புரோக்ராம் செய்ய மூன்று வாரங்கள் ஆகும் என மத்திய அரசு சில தினங்கள் முன்பு அறிவித்திருந்த நிலையில், அதில், 22,500 ஏடிஎம்கள் தற்போது மாற்றியமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக ஜேட்லி தெரிவித்தார்.
இதனால் ஏடிஎம்களில் பண புழக்கம் அதிகரித்து கூட்டம் குறையும் என்பது ஜேட்லி வாதமாக உள்ளது. ஆனால் மொத்த ஏடிஎம்கள் எண்ணிக்கையில் இது 10 சதவீதம் மட்டுமே என்பதால், பெரிய தாக்கத்தை உடனே ஏற்படுத்திவிடாது. படிப்படியாக அனைத்து ஏடிஎம்களும், அனைத்து வகை பணத்தையும் தந்தால் மட்டுமே நிலைமை சீராகும்.
இதனிடையே, இப்போதைக்கு புதிய ரூ.1000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படாது என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். மீண்டும் புதிய வகையில் ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகமாகும் என கூறப்பட்ட நிலையில், ஜேட்லி இப்படி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.