2ஜி ஸ்பெக்ட்ரம்: வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை கோரிய கனிமொழி மனு தள்ளுபடி
டெல்லி: 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி கனிமொழி எம்.பி., ஷாகித் பல்வா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக்கோரி கனிமொழி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோன்று இந்த வழக்கில் தொடர்புடைய ஷாகித் பல்வா, சுரேந்திர பிபாரா, கவுதம் தோஷி, ஹரி நாயர் ஆகியோர், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. சி.பி.ஐ. சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் வாதாடினார்.
ஏற்கனவே சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு.லலித் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்ய உள்ள நிலையில் அவருக்கு பதிலாக வக்கீல் ஆனந்த் குரோவர் என்பவரை சி.பி.ஐ. தரப்பில் வாதாடுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு விவரங்கள் முழுவதும் அறிந்து கொள்ளும் வகையில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் ஆனந்த் குரோவருக்கு கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று சி.பி.ஐ. சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இந்த மனுக்கள் மீதான விசாரணையை செப்டம்பர் 24-ந் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தனர்.
மேலும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் 2ஜி வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். கனிமொழி, ஷாகித் பல்வா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.