முடிவுக்கு வந்த "2ஜி" வழக்கு.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் யார் யார்?
டெல்லி: நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீதான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் அனைவரையும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று விடுதலை செய்துவிட்டது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்களை விதிமுறைகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராசா ஒதுக்கீடு செய்தார்; இதன் மூலம் அரசுக்கு ரூ30,984 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தினார் என்பது சிபிஐ வழக்கு. அதேபோல் இத்தகைய ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமங்கள் முறைகேடா ஒதுக்கீடு செய்யப்பட்டதில் கலைஞர் டிவி உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் ஆதாயமடைந்தன; இதில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன என அமலாக்கப் பிரிவும் வழக்குகள் தொடர்ந்தன.
இந்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டோரும் சாட்சிகளும்:
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார் பெகுரா, தொலைத் தொடர்பு துறை அமைச்சரின் செயலாளர் சொந்தாலியா, ஸ்வான் நிறுவனத்தின் எம்.டி சாகித் உஸ்மான் பால்வா, ஸ்வான் இயக்குநர் வினோத் கோயங்கா, ஸ்வான் நிறுவனம், யுனிடெக் நிறுவனத்தின் சஞ்சய் சந்த்ரா, யுனிடெக் தமிழ்நாடு நிறுவனம், குஷேகான் ப்ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஆசிப் பால்வா, குஷேகான் நிறுவன இயக்குநர் ராஜீவ் அகர்வால், சினியூக் மீடியாவின் இயக்குநர் கரீம் மொரானி, கலைஞர் டிவி இயக்குநர் சரத் குமார், கலைஞர் டிவி இயக்குநர் கனிமொழி, எஸ்ஸார் குழுமத்தின் ரவிகாந்த் ரூயா, ரிலையன்ஸ் ஏடிஏவின் கவுதம் தோஷி, மற்றும் சுரேந்திரா பிபாரா, ஹரி நாயர், ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம், எஸ்ஸார் குழுமத்தின் அனுஷ்மான் ரூயா, கெய்தான் குழுமத்தின் கெய்தான்,
சன்டா டிரேடிங் நிறுவனத்தின் கிரன் கெய்தான், எஸ்ஸார் குழுமத்தின் விகாஷ், லூப் டெலிகாம், லூப் மொபைல்ஸ், எஸ்ஸார் டெலிஹோல்டிங் நிறுவனம், மறைந்த முன்னாள் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, பிரதமரின் முதன்மை செயலர் நிர்பேந்திரா மிஸ்ரா, தொலைத் தொடர்பு முன்னாள் செயலாளர் மாத்தூர், சட்டத்துறை செயலர் விஸ்வநாதன், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, டினா அம்பானி, கருணாநிதி மனைவி தயாளு அம்மாள், தரகர் நீரா ராடியா. இவ்வழக்குகளின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி முன்பாக நடைபெற்று வந்தது.
இவ்வழக்கில் இன்று குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் நீதிபதி ஷைனி விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.