2ஜி: ஆ.ராசா, கனிமொழிக்கு முன்ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு!
டெல்லி: 2ஜி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம், அதற்கு கைமாறாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக ஆ.ராசா, கனிமொழி, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேர் மற்றும் 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 26ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
ஜாமீன்தர எதிர்ப்பு
அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு முன்ஜாமீன் தரக் கூடாது என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications