ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்... 2 தமிழக வீரர்கள் உள்பட 4 பேர் பலி
ஒடிசா : ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் 2 தமிழக வீரர்கள் உட்பட 4 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஒடிசாவின் மல்காங்கிரி மாவட்டம் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக கருதப்படுகிறது. இது ஒடிஷா-ஆந்திரா எல்லையில் உள்ளது.

ஜன்பாய் முகாமைச் சேர்ந்த 104-ஆவது படைப் பிரிவினர் வழக்கமான ரோந்துப் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தனர். சித்ரகொண்டா அணைப் பகுதியை படகு மூலம் கடந்து சிந்தாம்டோலி பகுதிக்கு அவர்கள் வந்தனர்.
அப்போது அப்பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களை குறிவைத்து மண்ணில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியை மாவோயிஸ்டுகள் வெடிக்கச் செய்தனர். அதைத் தொடர்ந்து காட்டுப் பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் ஏராளமானோர், பாதுகாப்புப் படை வீரர்களை சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
இதனைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்த மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த 2 வீரர்கள் உட்பட 4 பேர் பலியாகி உள்ளனர். பலியானோரில் கன்னியாகுமரியைச் சேர்ந்த அபிலாஷ் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய வீரர்கள் உடல் இன்று தமிழகம் கொண்டுவரப்படுகிறது.












Click it and Unblock the Notifications