2 பிஞ்சு குழந்தைகள், நிறைமாத கர்ப்பிணிகள்.. மொத்தம் 5 பேர் தற்கொலை! அதிர்ந்த ராஜஸ்தான்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மூன்று சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நமது நாட்டில் குடும்ப வன்முறை என்பது பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது. வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இதைத் தடுக்கும் வகையில் குடும்ப வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இருப்பினும், குடும்ப வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.
சடலங்கள்
இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தில் குடும்ப வன்முறை காரணமாக மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டம் டுடு நகரில் உள்ள கிணற்றில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளின் சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் மூவரும் சகோதரிகள் என்றும் அவர்கள் கலுதேவி, மம்தா மற்றும் கமலேஷ் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணிகள்
கலு தேவியின் இரு குழந்தைகள் - ஒருவருக்கு 4 வயது, மற்றொரு குழந்தை வெறும் 27 நாட்களின் சடங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரிழந்த மம்தா தேவி மற்றும் கமலேஷ் இருவரும் நிறைமாத கர்ப்பிணிகளாக இருந்தனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது போலீசார் பல அதிர்ச்சி தகவல்களைக் கண்டறிந்தனர்.
நடந்தது என்ன
கலுதேவி (27), மம்தா (23), மற்றும் கமலேஷ் (20) மூவரையும் கலுதேவியின் இரு குழந்தைகளும் கடந்த புதன்கிழமை முதல் மாயமாகி உள்ளனர். இது குறித்து புகார் அளிக்கப்பட்ட போதிலும், போலீசார் உரிய விசாரணையை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த மூன்று பெண்களும் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள மூவரின் கணவர்களும், தினமும் குடித்துவிட்டு வந்து அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கொடூர தாக்குதல்
அதிலும் குறிப்பாக கலுதேவி சமீபத்தில் தான் தனது கணவரின் பெற்றோரால் தாக்கப்பட்டு இருந்தார். இதனால் கண் பகுதியில் அவருக்குக் காயம் ஏற்பட்ட நிலையில், அவர் 15 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய சூழலும் ஏற்பட்டது. தங்கள் கணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் வன்முறையைத் தாங்க முடியாமல் தான் மூவரும் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
குழந்தை திருமணம்
குழந்தைகளாக இருந்த போதே இவர்களுக்குக் கடந்த 2003இல் மூன்று சகோதரர்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அந்த சமயத்தில் இளைய சகோதரி கமலேஷுக்கு வெறும் ஒரு வயது தான். சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்ட போதிலும், மூவரும் சொந்தக் காலில் நிற்க விரும்பி, அதற்காகக் கடினமாகப் படித்தனர். அதன்படி மம்தா போலீஸ் கான்ஸ்டபிளாக தேர்வானார். கலுதேவி பிஏ படிப்பின் இறுதி ஆண்டு படித்து வந்தார். அதேபோல இளைய சகோதரி கமலேஷ் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.
3 பேர் கைது
இப்படிப்பட்ட சூழலில் தான், அவர்களது வீடுகளில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிணற்றில் இருந்து அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன. இவர்கள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வரதட்சணை கேட்டு கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அவர்களைத் திருமணம் செய்து கொண்ட மூன்று சகோதரர்கள்- நர்சி, கோரியோ மற்றும் முகேஷ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.