ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவி 3 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு - ரகுராம் ராஜன்
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக் காலத்தை தற்போதைய 3 ஆண்டுகளிலிருந்து அதிகரிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வலியுறுத்தினார்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் வரும் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதியோடு ஓய்வு பெற இருக்கிறார். இந்நிலையில் பாராளுமன்ற நிலைகுழு அழைப்பு விடுத்ததன் பேரில், இந்திய பொருளாதாரம் மற்றும் ரிசர்வ் வங்கியின் எதிர்காலம் குறித்து தனது ஆலோசனைகளையும், கருத்துகளையும் ராகுராம் ராஜன் எடுத்து கூறினார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது: தற்போது, ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக் காலம் மூன்றாண்டுகளாக உள்ளது. இது, மிகவும் குறைவான கால அளவாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் ரிசர்வ் வங்கியின் தலைவர், துணைத் தலைவரின் பதவிக் காலம் என்பது நான்கு ஆண்டுகளாக உள்ளது.
வேண்டுமென்றால் மறுநியமனம் செய்யப்பட்டு அவர்களது பதவி காலம் நீட்டிக்கப்படுகிறது. அதனுடன் ஒப்பிடும் போது, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலம் குறுகியதாக உள்ளது. வாராக் கடன் அளவை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடன் வழங்குவதில் தனியார் வங்கிகளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. ஆனால், பொதுத் துறை வங்கிகளிடம் போதிய அளவில் நிதி இருந்தும் கடன் வழங்க தயக்கம் காட்டி வரும் சூழல் நிலவுகிறது.
பிரிட்டன் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகியதால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படபோகும் தாக்கம் குறித்தும் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரகுராம் ராஜன் விளக்கமளித்தார்..