ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்!
பொதுமக்கள் தங்களின் வாழ்நாள் சேமிப்பைச் சேமித்து வைக்கும் வங்கிகளில், கடந்த ஓராண்டில் நடைபெற்ற பண மோசடிகள் குறித்த திடுக்கிடும் புள்ளிவிவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது.
2026ஆம் நிதியாண்டில் (FY26) வங்கிகளில் நடைபெற்ற ஒட்டுமொத்த பண மோசடி மதிப்பு, முந்தைய ஆண்டை விட சுமார் 46 சதவீதம் என்ற அசுர வேகத்தில் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் வருடாந்திர அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த நிதியாண்டில் 32,803 கோடி ரூபாயாக இருந்த இந்த மோசடித் தொகை, இந்த ஆண்டு 48,021 கோடி ரூபாயாக எகிறி ஒட்டுமொத்த வங்கித் துறையையும் நுகர்வோரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ரிசர்வ் வங்கி அறிக்கையில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது. வங்கிகளில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்குகளின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் பாதியாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டில் 23,722 ஆக இருந்த வங்கி மோசடி வழக்குகளின் எண்ணிக்கை, இந்த நிதியாண்டில் 10,114 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, பதிவாகும் தனிநபர் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருந்தாலும், ஏமாற்றப்பட்ட ஒட்டுமொத்தப் மோசடி பணத்தின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள் அதிகரித்துள்ளது.
இதன் மூலம், மோசடியாளர்கள் தங்களின் உத்திகளை மாற்றி, குறைந்த எண்ணிக்கையிலான தாக்குதல்கள் மூலமாகவே மிகப்பெரிய அளவிலான தொகையை வங்கிகளில் இருந்து சுருட்டியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொதுத்துறை வங்கிகள் (Public Sector Banks) மற்றும் முன்னணி தனியார் வங்கிகள் (Private Sector Banks) ஆகிய இரண்டு பிரிவுகளிலுமே இந்த மோசட சூழல் நிலவுகிறது. இரண்டு தரப்பு வங்கிகளிலுமே ஒட்டுமொத்தமாகப் பதிவாகும் மோசடி வழக்குகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்திருந்தாலும், அந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட பணத்தின் அளவு கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
வங்கிகள் தங்களின் பாதுகாப்பு உள்கட்டமைப்புகளைப் பலப்படுத்தினாலும், நவீனத் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்திப் பெருமளவிலான நிதியை மோசடிப் பேர்வழிகள் அள்ளிக்கொண்டு போவது வங்கி மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நிதியாண்டுகளின் தரவுகளை ஆராய்ந்து பார்க்கும் போது, எந்தெந்தப் பிரிவுகளில் மிக அதிகப்படியான மோசடிகள் நடந்துள்ளன என்ற விவரத்தை ரிசர்வ் வங்கி வெளிப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்குப் பயன்படுத்தும் ஏடிஎம் கார்டுகள் (Cards), கணினி மூலமாக மேற்கொள்ளப்படும் இணைய வழி வங்கிச் சேவைகள் (Internet Banking) மற்றும் மொபைல் ஆப்ஸ் மூலமாக நடத்தப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (Digital Payments) ஆகிய பிரிவுகளில்தான் மிக அதிகமான எண்ணிக்கையிலான மோசடிகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களைச் சேர்ந்த நடுத்தர மற்றும் கிராமப்புற எளிய மக்கள், ஆன்லைன் மூலமாகப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன. மேலும் இவர்கள் தான் இதில் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் எனவும் தரவுகள் கூறுகிறது. பெரு நகரங்களில் இருக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு வழியில் விழிப்புணர்வு பெற்று இத்தகைய மோசடிகளில் இருந்து தப்பித்துவிடுகிறார்கள்.
போலி இணையதள லிங்க்குகள், ஓடிபி (OTP) திருட்டுகள் மற்றும் போலியான போன் கால் மூலம் டிஜிட்டல் முறையில் சாமானிய மக்கள் எளிதாக ஏமாற்றப்படுவதால், ஆன்லைன் வங்கிப் பயன்பாடுகளில் பொதுமக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications