பெங்களூரில் ஷூவை பிய்த்த 3 வயது சிறுவனை அடித்துக் கொன்ற உறவுக்காரர்
பெங்களூர்: பெங்களூரில் ஷூவை பிய்த்து, சட்டையை கிழித்ததற்காக 3 வயது சிறுவனை அவரை 16 வயது உறவுக்கார பையன் அடித்துக் கொலை செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் ஹாஸன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி. அவரது மனைவி ஷிவம்மா. அவர்களின் மகள் ப்ரித்வி, மகன் ப்ரீத்தம்(3). ரவிக்கு பெங்களூரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஹுலிமாவு பகுதியில் எலக்ட்ரீஷியன் வேலை கிடைத்தது.
இதையடுத்து அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் ஹுலிமாவு பகுதியில் குடியேறினார். கடந்த திங்கட்கிழமை மதியம் ஷிவம்மாவின் 16 வயது உறவுக்கார பையன் ரகு(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வந்து ப்ரீத்தமை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். மாலையில் ப்ரீத்தம் என்ன செய்கிறான் என்று பார்த்துவிட்டு வருமாறு ஷிவம்மா தனது மகளை ரகுவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
சிறுமி ஓடி வந்து ஹோட்டலில் சப்ளையர் வேலை செய்யும் ரகு ப்ரீத்தமை அடிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஷிவம்மா அந்த வீட்டிற்கு சென்றபோது ப்ரீத்தமை மாலை 5 மணிக்கு வீட்டில் விடுவதாக ரகு தெரிவித்துள்ளார். மாலை வீட்டிற்கு வந்த ப்ரீத்தம் மயங்கி விழுந்தான். உடனே அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிறுவனின் கைகள், முதுகு, வயிறில் அடிபட்டதால் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ரகுவை பிடித்து விசாரித்தபோது அவருக்கு பிடித்த ஷூ மற்றும் சட்டையை சிறுவன் கிழித்துவிட்டதால் அவனை உருட்டுக்கட்டையால் அடித்து நொறுக்கியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்த ரகுவை கைது செய்தனர்.