உத்தரகாண்ட் நிலச்சரிவு.. புனித யாத்திரைக்கு போன 30 தமிழர்களின் கதி என்ன? மீட்பு பணியில் ஹெலிகாப்டர்
டேராடூன்: தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு புனித யாத்திரை சென்ற 30 பேர் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலம் 30 பேரையும் பத்திரமாக மீட்க திட்டமிடப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலாத்தலமாக உள்ளது. இமயமலை மற்றும் இமயமலை அடிவாரத்தில் உள்ள கோவில்களுக்கு நம் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் புனித யாத்திரை செல்கின்றனர்.

குறிப்பாக உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத், கேதார்நாத் உள்ளிட்ட இடங்கள் ஆன்மீக சுற்றுலாவுக்கு பெயர் பெற்றவை. அதேபோல் ஆதி கைலாஷ் பகுதிக்கும் அதிகமானவர்கள் சென்று வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து 30 பேர் உத்தரகாண்ட் மாநிலம் ஆதி கைலாஷ் பகுதிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். இவர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர்கள். இந்நிலையில் தான் தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆதி கைலாஷ் பகுதிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 30 பேரால் மீண்டும் அங்கிருந்து திரும்பி வர முடியாத நிலை உருவாகி உள்ளது.
இதுபற்றி அறிந்தவுடன் உத்தரகாண்ட் போலீசார், பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியை தொடங்கி உள்ளனர். இதற்கிடைய நிலச்சரிவு பற்றி அங்குள்ள மக்கள் தங்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழக அரசும் அவர்களை பத்திரமாக மீட்க முனைப்பு காட்டி வருகிறது. இதுதொடர்பாக அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், கடலூர் கலெக்டர் ஆதித்ய செந்தில்குமாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இதையடுத்து தமிழக அரசு சார்பில் உத்தரகாண்ட் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களுக்கு உணவு, குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.
நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது நிலச்சரிவு ஏற்பட்டதால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணி என்பது மேற்கொள்ளப்பட உள்ளது. அதன்படி இன்று 30 தமிழர்களும் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications