லிங்கா படத்தின் 150 ஷோக்களை தொடர்ந்து 'கண்டுகளித்த' பெங்களூரு வணிக வரி அதிகாரிகள்!
பெங்களூரு: ரஜினிகாந்த் நடித்த லிங்கா திரைப்படத்தின் 150 ஷோக்களை தொடர்ந்து கண்டு களித்துள்ளனர் கர்நாடக வணிக வரித்துறை அதிகாரிகள் 33 பேர். இதற்கு காரணம் அவர்கள் ரஜினிகாந்த்தின் மிகப்பெரிய விசிறிகள் என்பது கிடையாது. காரணம் வேறு.
ரஜினிகாந்த் நடித்து டிசம்பர் 12ம்தேதி வெளியான லிங்கா திரைப்படம் பெங்களூருவில் 33 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. சினிமா தியேட்டர்கள் தாங்கள் விற்பனை செய்யும் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாயில், வணிக வரி செலுத்த வேண்டியது அவசியம். ஆனால் குறைந்த வருவாய் கணக்கு காட்டிவிட்டு வரியையும் குறைத்து மதிப்பிடுவதும் தியேட்டர்களின் வழக்கம்.
லிங்கா பெரிய நடிகர் நடித்த, ரசிகர்களை அதிகம் ஈர்க்க கூடிய படம் என்பதால், கர்நாடக வணிக வரி அதிகாரிகளின் பார்வை, இத்திரைப்படத்தை திரையிட்ட தியேட்டர்கள் மீது விழுந்தது. தியேட்டர்கள் பொய் கணக்கு காண்பிக்கிறார்களா, இல்லையா என்பதை கண்டறிய 33 அதிகாரிகளை பெங்களூரில் லிங்கா திரையிட்ட ஒவ்வொரு தியேட்டர்களுக்கும் அனுப்பி வைத்தது வணிக வரித்துறை.
இந்த அதிகாரிகள் டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்களிலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தியேட்டர்களில் அனைத்து ஷோக்களையும் அமர்ந்து பார்த்துள்ளனர். ஆகமொத்தம், 150க்கும் மேற்பட்ட ஷோக்களை இந்த அதிகாரிகள் பார்த்துள்ளனர். கர்நாடக வரலாற்றிலேயே வணிக வரித்துறை அதிகாரிகள் இத்தனை பேர் ஒரே விஷயத்துக்காக சோதனை நடத்தியது இதுதான் முதன்முறை என்று கூறப்படுகிறது.
இந்த இரு நாள் சோதனை முடிவில், தியேட்டர்கள் சுமார் ரூ.45 லட்சம் அளவுக்கு ஏய்த்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து தியேட்டர்களிடமிருந்து வணிக வரித்துறை அந்த தொகையை வசூலித்துள்ளது.