டெல்லியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு; வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதி
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் ஹரியானாவின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டரில் 4.1 ஆக பதிவாகியது. இதனால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் ஜாஜர் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவு கோளில் 4.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நில நடுக்கம் சில நொடிகள் நீடித்தது.
நில நடுக்கத்தின் தாக்கம் டெல்லியின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது. நொய்டா, குர்கான் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின. அப்போது நன்றாக தூங்கிக் கொண்டிருந்த பொது மக்கள் ஏதோ விபரீதம் நடந்து விட்டது என எண்ணி பயத்தில் எழுந்தனர்.
அதன் பின்னர் தான் நில நடுக்கம் ஏற்பட்டது தெரிந்தது. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். நில நடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.