ஒரு மணிநேரத்தில் நாட்டையே உலுக்கிய 4 நிகழ்வுகள்.. இந்திய நீதித்துறையில் என்ன நடக்கிறது?
1 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடந்த 4 நிகழ்வுகள் இந்திய நீதித்துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
டெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சேர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என்று யாருமே நினைத்து பார்த்து இருக்க மாட்டார்கள். முக்கியமாக அவர்கள் தலைமை நீதிபதி மீதே புகார் அளிப்பார்கள் என்றும் நினைத்து இருக்க மாட்டார்கள்.
அவர்களின் 5 நிமிட பேட்டிக்கு அடுத்து தொடர்ந்து பரபரப்பான நிகழ்வுகள் நடந்து வருகிறது. நீதித்துறையும், மத்திய அரசும் மிகவும் பதற்றத்துடன் காணப்படுகிறது.
நீதித்துறை தொடங்கி டிவிட்டர் வரை மக்கள் இதை குறித்துதான் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். டிவிட்டர் டிரெண்ட்டில் 10 நிமிடத்தில் இந்த விஷயம் முதல் இடம் பிடித்துள்ளது.
பேட்டி
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நான்கு பேர் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிப்பார்கள் என்ற செய்தி வெளியே வந்தவுடன் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், மதன் லோகுர், செல்லமேஸ்வர், குரியன் ஜோசப் அளித்த பேட்டி புயலை கிளப்பியது. நீதித்துறை சரியாக இல்லை, ஜனநாயகம் மோசமாகிவிடும் என மறைமுகமாகவும் நேரடியாகவும் நிறைய குற்றச்சாட்டுகளை வைத்தார்கள். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீதும் இவர்கள் குற்றச்சாட்டு வைத்தார்கள்.
பிரதமரும் அமைச்சரும்
இந்த சம்பவம் நடந்தவுடன் சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனை நடத்தினார். நீதித்துறையில் என்ன மாதிரியான பிரச்சனைகள் இருக்கிறது என்பது குறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் மோடி விவாதம் செய்தார். இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது, என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்றும் விவாதித்து இருக்கின்றனர்.
அட்டர்னி ஜெர்னல்
இந்த பேட்டி முடிந்த அடுத்த நிமிடமே மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவசர அழைப்பு விடுத்தார். தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபாலும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் இந்த பிரச்சனை குறித்து தீவிர விவாதம் நடத்தினார்கள். இதில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என்று பேசியுள்ளனர்.
புயல்
தற்போது இந்த நிகழ்வில் அடுத்த புயல் உருவாக இருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தற்போது இந்த புகார்கள் குறித்து வெளிப்படையாக பேசவுள்ளார். இன்னும் சில நிமிடத்தில் அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருக்கிறார். இவரின் பேட்டியை தொடர்ந்து இந்த விஷயத்தில் பெரிய தெளிவு பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.