விவசாயியாக மட்டும் பிறந்து விடாதே மகனே.. தற்கொலை செய்த தந்தை பேசிய கடைசி வார்த்தை!
ஹைதராபாத்: தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது மகனிடம் கடைசியாக பேசும்போது விவசாயியாக மட்டும் பிறக்காதே என்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது.
மேடக் மாவட்டத்தை சேர்ந்த ராயவரம் கிராமத்தில் உள்ள பள்ளியில் படிக்கும் தனது மகனான வம்சியை பார்க்கச் சென்றுள்ளார் ஒரு விவசாயி. அவனை அருகிலுள்ள டீ கடைக்கு அழைத்து சென்ற அவர், அவனுக்கு டீயும் பன்னும் வாங்கிக்கொடுத்த பின் ஐந்து ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார்.
பின்னர் நன்றாக படிக்கவேண்டும் என்று தனது மகனுக்கு அறிவுரை கூறிய அவர், ஒரு போதும் விவசாயியாக மட்டும் மாறிவிடாதே என்று கூறியதுடன் இனி யாரும் விவசாயியாக மட்டும் பிறக்கக்கூடாது என்று கூறியுள்ளார்.
குட்பை சொல்லிய தந்தை
தனது மகனுடன் பள்ளிக்குச் சென்ற அவர், அவனது வகுப்பு ஆசிரியரான கிருஷ்ணாவிடம் மகன் நன்றாக படிக்கிறானா என்று பார்த்துக்கொள்ளுமாறு கூறி மகனுக்கு குட் பை சொல்லிவிட்டு சென்றார். அவர் சென்ற அரை மணி நேரம் கழித்து தூக்கில் தொங்கி அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்துள்ளது.
3 விவசாயிகள் தற்கொலை
தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகரராவின் சொந்த தொகுதியான மேடக் மாவட்டம் காஜ்வெல் தொகுதியில், கடந்த 3 வாரத்தில் 3 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். பருவமழை பொய்த்ததால், பயிரிடப்பட்ட பயிர்கள் வாடுவதைக் கண்டு மனம் வருந்திய அவர்கள், கடன் சுமையும் சேர்ந்துக் கொண்டதால் தற்கொலை செய்ததாக குடும்பத்தார் தெரிவித்தனர்.
விவசாயக்கடன்
மாநில அரசு உறுதியளித்த விவசாயக் கடன் தள்ளுபடி, தங்க நகை கடன் தள்ளுபடி ஆகிய பலன்கள் கிடைத்திருந்தால், இந்த மூவரின் உயிர் இழப்பை தடுத்திருக்க முடியும் என்றும் குடும்பத்தினர் அழுது புலம்புகின்றனர்.
தாலியை அடகு வைத்து
ராயவரம் கிராமத்தைச் சேர்ந்த முத்யாலு, ஏற்கெனவே கடன் தொல்லையால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் விவசாய பணிகளுக்காக தனது 24 வயது மனைவியின் தாலியை அடமானம் வைத்து ரூ.45,000 பெற்றார். அதே நேரத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். நிலைமை மாறிவிடும் என்று நம்பியிருந்தார் என்று அவருடைய மனைவி கனகா கண்ணீருடன் தெரிவித்தார்.
பருத்தியால் பலனில்லை
அதே கிராமத்தைச் சேர்ந்த யேலய்யா, தனது 2 ஏக்கர் நிலத்துடன், அருகில் உள்ள 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பருத்தி பயிரிட்டார். ஆனால், போதிய தண்ணீர் இல்லாததால், பருவமழை பொய்த்ததால், பயிர்கள் வாடிவிட்டன. கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுக்கவே உயிரை மாய்த்துக்கொண்டார். இப்போது யேலய்யாவின் 17 வயது மகள் பாலமணி கண்ணீருடன் நிற்கிறார்.
கடன்வாங்கி விவசாயம்
கோடகண்ட்லா கிராமத்தைச் சேர்ந்த ரவியின் நிலைமை மிகவும் மோசமாகும். விவசாயத் தொழிலாளியாக இருந்த அவர், கடன் வாங்கி, நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று ரவியின் தாயார் அழுது புலம்பினார்.
பொய்த்துப்போன பருவமழை
பருவமழை பொய்த்துள்ளது. போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் வாடி வருகின்றன. இதற்கு அரசு மாற்று ஏற்பாடுகளை செய்தாக வேண்டும் என்று வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிரா விவசாயிகள்
மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று முன்தினம் பார்லிமென்டில் சமர்ப்பித்த நாளில், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், மூன்று விவசாயிகள், கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிய வந்துள்ளது.
61 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை
மழைக்காக ஏங்கிக் கொண்டிருந்த விவசாயிகள், தொடர்ந்து மூன்றாண்டுகளாக மழை பெய்யாததால், இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும், 3,100 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 1995 முதல், 61 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கிறது ஒரு புள்ளிவிபரம். விவசாயிகளின் உயிரைப் பாதுகாத்தால் மட்டுமே நாட்டில் விவசாயத்தை காக்க முடியும். இல்லையெனில் விவசாயம் என்ற வார்த்தையை புத்தகங்களில் மட்டுமே காணமுடியும் என்கின்றனர் சமூக ஆர்வலகர்கள்.












Click it and Unblock the Notifications