ரங்கசாமி படத்துடன் இருந்த 400 'ரைஸ்' மூட்டைகள் பறிமுதல்!

காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் பறக்கும்படை தாசில்தார் கலைமணி தலைமையில் கட்டிடங்களில் தேர்தல் பிரசார விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
அப்போது வாலாஜாபாத் அருகே உள்ள கீழ்ஒட்டிவாக்கத்தில் உள்ள அரிசி ஆலையின் சுவரில் உள்ள விளம்பரத்தை அழிக்கச்சொல்வதற்காக அரிசி ஆலைக்குள் நுழைந்தபோது ஒரு லாரியில் அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டிருப்பதை கண்டனர்.
சந்தேகம் அடைந்து அரிசி ஆலையில் விசாரணை மேற்கொண்டபோது, அரிசி ஆலையில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். மேலும் அரிசி ஆலை முழுவதும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அப்போது புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி படத்துடன் வெள்ளை நிற கோணிப்பையில் 50 கிலோ இலவச அரிசி புதுச்சேரி அரசு என அச்சடிக்கப்பட்டு சுமார் 200 மூட்டைகளும், மேலும் சுமார் 200 மூட்டைக்கான அரிசி குவிக்கப்பட்டும் இருந்தது.
இதுகுறித்து உடனடியாக காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கா.பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டரின் உத்தரவின்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் பவழந்தி மற்றும் பறக்கும்படை அதிகாரிகள், வாலாஜாபாத் இன்ஸ்பெக்டர் முரளி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் அரிசி முழுவதையும் பறிமுதல் செய்தனர். மேலும் தேர்தல் நேரத்தில் இலவசங்கள் வழங்கப்பட கூடாது என்ற உத்தரவினால் இலவச அரிசியை வைத்திருந்ததாகவும், வேறு மாநிலத்திற்கு அனுப்ப இருந்ததற்காகவும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications