எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடாவடி தாக்குதல்... 7 வயது சிறுமி, ராணுவ வீரர் பலி!
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய அடாவடித் தாக்குதலில் ஒரு சிறுமி மற்றும் ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரீநகர் : எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அடாவடி துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் மற்றும் 7 வயது சிறுமி உயிரிழந்தனர்.
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாலாகோட், மாஞ்சாகோட் மற்றும் பிம்பெர் காலி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுத்தது. பிம்பெர் காலி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் கிராமவாசிகளை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 7 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். இவர் பூஞ்ச் மாவட்டம் பாலகோட்டை சேர்ந்த சைதா என்று தெரியவற்துன்னது.
இதே போன்ற ராஜோரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அடாவடி தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் நாய்க் முத்தாசிர் அகமது உயிரிழந்தார். அகமது ஜம்மு காஷ்மீரின் திரால் பகுதியை சேர்ந்தவர் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ஷெல் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதை தொடர்ந்து இருநாட்டு டிஜிஎம்ஓ அளவிலான பேச்சுவார்த்தனையானது தொலைபேசியல் நடந்துள்ளது. அப்போது எல்லை விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 வீரர்கள் உயிரிழந்துவிட்டனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்திய ராணுவ தாக்குதலில் சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வாகனம் நீலம் ஆற்றில் விழுந்துவிட்டது என அந்த நாடு கூறியுள்ளது. மேலும் ஒரு ராணுவ வீரரின் சடலம் மீட்கப்பட்டதாகவும், மூன்று ராணுவ வீரரின் சடலத்தை தேடி வருவதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.