நுரையீரலில் 95 சதவீத தொற்று.. 80 நாட்கள் செயற்கை சுவாசம்.. கொரோனாவை துரத்தி அடித்த 62 வயது மூதாட்டி
போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் 95 சதவீத நுரையீரல் தொற்றுடன் 80 நாட்கள் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்த 62 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார்.
கொரோனா வைரஸ் வந்தால் நேரடியாக நம் நுரையீரலை பாதிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் உறுதியானதும் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து நுரையீரலில் எத்தனை சதவீதம் சேதத்தை இந்த வைரஸ் ஏற்படுத்தியுள்ளது என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.
அந்த சதவீதத்திற்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 40 சதவீதத்திற்கு மேல் நுரையீரலில் பாதிப்பு இருந்தால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.

மத்திய பிரதேசம்
இந்த நிலையில் 95 சதவீத நுரையீரல் பாதிப்புடன் இருந்த 62 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். மெடிக்கல் மிராக்கிள் என சொல்லப்படும் அளவுக்கு இந்த மூதாட்டியின் கொரோனா சிகிச்சை ஹிஸ்டரி உள்ளது. அவர் யார் என பார்ப்போம். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியை சேர்ந்தவர் உஷா நிகாம் (62).

காய்ச்சல்
இவர் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து விட்டு ஓய்வு பெற்றவர். இவரது சகோதரி அண்மையில் இறந்த நிலையில் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல அந்த மாநிலத்தில் உள்ள தேவாஸ் நகருக்கு சென்றார் உஷா. அப்போது மீண்டும் உஜ்ஜயினி திரும்பும்போது காய்ச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

கொரோனா டெஸ்ட்
இதையடுத்து கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி அவருக்கு பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு அவர் மாதவ் மருத்துவமனையில் உள்ள கோவிட் வார்டில் அனுமதிக்கப்பட்டார். முதலில் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில் நுரையீரலில் தொற்றே இல்லை என ரிப்போர்ட் வந்தது.

நுரையீரல்
இதையடுத்து அக்டோபர் 24-ஆம் தேதி அவரது நிலைமை மோசமானதும் அவர் அதே மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு ரெம்டெசிவிர் மருந்து 6 டோஸ் கொடுக்கப்பட்டும் அவரது நிலையில் முன்னேற்றம் ஏதும் இல்லை. இதையடுத்து அவர் அக்டோபர் 29-ஆம் தேதி இந்தூரில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டதில் 65 சதவீதம் நுரையீரலில் சேதமடைந்ததாக தெரியவந்தது.

லேசான முன்னேற்றம்
இதையடுத்து அவரது நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்த நிலையில் அவரது மகன்கள், மருமகள்கள் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு உஷாவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் உஷாவுக்கு நம்பிக்கை கொடுத்தனர். அவருக்கு வீட்டிலிருந்து உணவு கொடுக்கப்பட்டது. 5 டோஸ் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. எனினும் அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றமே ஏற்பட்டது.

சிடி ஸ்கேன்
இவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களும் நம்பிக்கை அளிக்கு்மபடியாக எதையும் சொல்லவில்லை. எனினும் சிறந்த சிகிச்சை அந்த மூதாட்டிக்கு அளிக்கப்பட்டது. நவம்பர் மாதம் 12-ஆம் தேதி கொரோனா சோதனை எடுக்கப்பட்ட போது அவருக்கு நெகட்டிவ் என வந்தது. இதையடுத்து அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு நவம்பர் 26ஆம் தேதி சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.

சுவாசம்
அப்போது அவரது நுரையீரலில் 95 சதவீதம் தொற்று இருந்தது. இதையடுத்து ஆக்ஸிஜன் உதவியுடன் அவர் கொஞ்ச நாள் இருப்பார் என மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவரை டிசம்பர் 2ஆம் தேதி அவரது குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்து சென்றனர். அவருக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசம் கொடுக்கப்பட்டது. அந்த மூதாட்டியின் உடல்நிலை நன்கு தேறியது.

நேர்மறையான எண்ணங்கள்
அவரது வீட்டில் மூதாட்டிக்கு நேர்மறையான எண்ணங்கள் வர பிறந்தநாள்கள், திருமண நாட்களை குடும்பத்தினர் கொண்டாடினர். தற்போது அவரது பணிகளை அவராகவே செய்து கொள்வதாக உறவினர்கள் கூறுகிறார்கள். 95 சதவீத நுரையீரல் தொற்றுடன் 80 நாட்கள் செயற்கை சுவாசத்துடன் இருந்த நிலையிலும் தனது வில் பவரால் உயிர் பிழைத்த உஷா நிகாமுக்கு பாராட்டுகள் குவிகின்றன.












Click it and Unblock the Notifications