தீவிரவாதிகள் தாக்குதல்.... அசராமல் 50 யாத்ரீகர்களை பாதுகாத்த சலீமுக்கு சலாம்!
தீவிரவாதிகள் பயங்கரமாக துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, தன் உயிரை பற்றிக் கூட கவலைப்படாமல் 50 பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்ற சாதனை நாயகன் ஷேக் சலீம் கஃபூர்.
சென்னை: ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத்துக்கு சென்ற பயணிகள் பேருந்தை வழிமறித்து தீவிரவாத கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியபோதும், அசராமல் 50 பயணிகளின் உயிரை காப்பாற்றிய சலீமை சுதந்திர தினத்தின் சாதனை நாயகன் என்றால் அது மிகையாகாது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி பர்ஹான் வானியின் நினைவு தினத்தையொட்டி கடந்த ஜூலை 8-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமர்நாத் யாத்திரை ஜூலை 11-ஆம் தேதி மீண்டும் தொடங்கியது.
அமர்நாத் யாத்திரை
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் படின்கு என்ற பகுதி வழியாக 61 பக்தர்களுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் இருபுறமும் மறைந்திருந்த தீவிரவாதிகள் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ்ஸை வழி மறித்தனர்.
துப்பாக்கிச் சூடு
அப்போது அந்த பஸ் மீது கண்மூடித்தனமாக திடீர் தூப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் 7 பேரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர்.
டிரைவரின் சாமர்த்தியம்
7 பேர் கொல்லப்பட்ட பின்பும் வெறி அடங்காத தீவிரவாதிகள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது பயணிகளை காப்பாற்றியே தீர வேண்டும் என்று பஸ் டிரைவர் ஷேக் சலீம் கஃபூர் கருதினார். உடனே பஸ்ஸை 70 முதல் 80 கி.மீ.தூரத்துக்கு வேகமாக ஓட்டிச் சென்ற சலீம் பயணிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றார்.
அசராத தைரியம்
தன் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் 50 பேரின் உயிரை காப்பாற்றிய சலீமின் மனிதநேயத்தை அங்கிருந்தோர் முதல் நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. இதுகுறித்து சலீம் கூறுகையில், பஸ்ஸை வேகமாக ஓட்டிச் செல்ல அல்லா தான் எனக்கு மன தைரியத்தை கொடுத்தார். தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டே இருக்க, நான் பஸ்ஸை வேகமாக எங்கும் நிறுத்தாமல் செலுத்தினேன். ராணுவத்தினரை எங்கு சந்திக்கிறோமோ அப்போதுதான் வண்டியை நிறுத்த வேண்டும் என்று மனதில் இருத்திக் கொண்டு ஓட்டினேன் என்றார்.
சாதனை நாயகன்
வாகனம் விபத்து ஏற்பட்டாலே தமது உயிரை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்று கிடைக்கும் கேப்பில் தப்பிவிடும் டிரைவர்கள் மத்தியில் தன் உயிர் போனாலும் பயணிகளின் உயிர்களை காப்பாற்றியதோடு, 7 பேரின் உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்று வருந்தும் இவர் நிஜமாகவே சாதனை நாயகர்தாங்க. ஆக, சலீமுக்கு ஒரு சலாம்.