அதென்ன 'பிராமணர் சுடுகாடு'? அதெப்படி அரசே பராமரிக்கலாம்? ஒடிஷாவில் வெடித்த 'சனாதன எதிர்ப்பு குரல்'
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலம் கேந்திரபாரா நகராட்சி நிர்வாகம், பிராமணர்களுக்கு மட்டுமான சுடுகாட்டை அரசு செலவில் பராமரித்து வருவது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
நாட்டில் தீண்டாமை தலைவிரித்தாடும் இடங்களில் சுடுகாடுகளும் தப்பவில்லை. கவிஞர் அறிவுமதி,
பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு

என ஹைக்கூ கவிதை ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. இரட்டை சுடுகாடு, இரட்டை குவளை முறை சட்டவிரோதம் என்றாலும் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிற ஒன்றாக இருக்கிறது; இதற்கு எதிரான போராட்டங்களும் தமிழ்நாட்டில் வலுவாகவும் இருக்கிறது. தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளுக்கு முன்னரே பிராமணாள் மெஸ், பிராமணாள் கஃபே போன்றவை கைவிடப்பட்டுவிட்டன. ஏனெனில் சனாதன தர்மத்தை நிலைநாட்டும் இத்தகைய இழிநிலை ஒழிக்கப்பட வேண்டும் என்பது சமூக நீதியாளர்களின் தொடர்ச்சியான குரல்.
தற்போது ஒடிஷாவிலும் இந்த சனாதன தர்மத்தை நிலைநாட்டும் செயல்பாடுகளுக்கு எதிரான குரல் வெடித்திருக்கிறது. ஒடிஷாவின் கேந்திரபாரா நகராட்சி நிர்வாகம் அண்மையில் சுடுகாடு ஒன்றை சீரமைத்தது. அந்த சுடுகாட்டின் பெயரே 'பிராமணர் மயானம்' என்பதுதானாம். அதுவும் அரசாங்க நிதியில் பிராமணர்களுக்கான தனி மயானம் பராமரிக்கப்படுகிறது என்பதுதான் சர்ச்சையானது. இந்த மயானம் 155 ஆண்டுகள் பழமையானதும் கூடவாம்.
ஒடிஷா தலித் சமாஜ் நிர்வாகி நாகேந்திர ஜெனா கூறுகையில், பிராமணர்களுக்கு மட்டுமான மயானத்தை நகராட்சி நிர்வாகமே நீண்டகாலம் பராமரித்து வரும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜாதிய பாகுபாட்டை ஒரு அரசு அமைப்பே எப்படி ஊக்கப்படுத்த முடியும்? இந்த ஜாதிய வேறுபாடு விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்கிறார்.
சிபிஎம் கட்சியின் நிர்வாகி காயதார் தால் கூறுகையில், பிராமணர்களுக்கு மட்டுமேயான சுடுகாடு என்பது சட்டவிரோதமானது. அதே மயானத்தில் இதர ஜாதியை சேர்ந்தவர்களும் தங்களது உறவுகளுக்கு இறுதி சடங்குகளை செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அத்துடன் பிராமணர்களுக்கு மட்டும் தனி சுடுகாடு என்பது அரசியல் சாசனம் பிற சமூகத்தினருக்கும் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமைகளை மீறிய ஒன்று. இதை எப்படி அரசாங்கம் அனுமதிக்கிறது எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஒடிஷாவின் பிராமணர் சுடுகாடு விவகாரம் சமூக வலைதளங்களிலும் பேசு பொருளாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications