ஆந்திராவில் சம்பவம்: உயர் அதிகாரி முகத்தில் மணலை வீசி பெண் அதிகாரி சாபம் - வைரல் வீடியோ
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் உயர் அதிகாரியின் முகத்தில் மீது மணலை வீசி சாபம் விட்டுள்ளார் பெண் அதிகாரி. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாகப்பட்டினம்: கிராமங்களில் மனம் நொந்து சாபம் விடுபவர்கள் மண் அள்ளி தூற்றுவார்கள். அது போல ஒரு சம்பவம் ஆந்திராவில் அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்துள்ளது. தன்னை துன்புறுத்தி மனம் நோக வைத்த உயரதிகாரியின் முகத்தில் மணலை அள்ளி வீசி சாபம் கொடுத்துள்ளார் பெண் அதிகாரி. விசாகப்பட்டினத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மண் வீச்சுக்கு ஆளான அதிகாரியின் பெயர் புஷ்பரவரதன் என்பதாகும். இவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அறநிலையத்துறை அலுவலக துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இதே அலுவலகத்தில் உதவி துணை ஆணையராக பணியாற்றி வரும் சாந்தி என்பவர்தான் மண்ணை வீசி சாபம் கொடுத்தவர்.

கடந்த சில வாரங்களாக புஷ்ப வர்தன் தன்னையும் மற்ற அதிகாரிகளையும் மனரீதியாக துன்புறுத்துவதாகவும், தனிப்பட்ட கோபத்தின் காரணமாக அதிகாரிகளை பழிவாங்குவதாகவும், பணியிடமாற்றம் செய்வதாகவும், விசாரணைக்கு உத்தரவிடுவதாக கூறி மிரட்டுவதாகவும் சாந்தி குற்றம் சாட்டினார்.
இதன்காரணமாக புஷ்பவரதன் தன் அறையில் அலுவல் ரீதியான ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டு இருந்த போது அந்த அறைக்குள் வந்த உதவி கமிஷனர் சாந்தி கையில் கொண்டு வந்திருந்த மண்ணை புஷ்பவரதன் முகத்தில் வீசி விட்டு திட்டினார். இந்த காட்சி அந்த அறையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.
சாந்தி கூறும், இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று கூறியுள்ளா புஷ்பவரதன், ஜூலை 14 முதல் நான் விசாகப்பட்டினத்தில் இல்லை. நான் யாரிடமும் பேசுவதற்கு கூட வாய்ப்பில்லை வியாழக்கிழமை தான் அலுவலகத்திற்கு வந்தேன் என்று கூறியுள்ளார்.
என் அலுவலகத்திற்குள் நுழைந்த சில நொடிகளில் என் மீது மணலை வீசிவிட்டு அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தி சாந்தி என்னை திட்டினார். இது தொடர்பாக சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறை கமிஷனரிடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications