2 வயது குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை: பெங்களூருவில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம்
சென்னை: சென்னை தனியார் மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பெங்களூரில் 2 வயது 10 மாதமான குழந்தையிடம் இருந்து எடுக்கப்பட்ட இதயம் சென்னை வந்தது. 8 மருத்துவர்கள் இரண்டரை வயது குழந்தைக்கு இதயத்தை மாற்றி சிகிச்சை அளித்தனர்.
சென்னை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைபெற்று வருகிறது.
பெங்களூரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு 1 மணிக்கு இதயம் கொண்டுவரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் இதயம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போக்குவரத்து போலீஸார் இடையூறு ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரிசெய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பிவைத்தனர். விமான நிலையத்தில் இருந்து 11 நிமிடத்தில் அடையாறு மருத்துவமனையை இதயம் வந்தடைந்தது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அடையாறுக்கு 11 சிக்னல்கள் உள்ளன. பழவந்தாங்கள், சிமென்ட் ரோடு, ஆசர்கானா, கிண்டி, ஹால்டா ஜங்சன், லிட்டில் மவுண்ட், காந்தி மண்டபம், மத்திய கைலாஷ், எல்.பி. ரோடு என அனைத்து சிக்னல்களிலும் மூன்று போலீசார் வீதம் நின்று ஆம்புலன்சுக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். பெங்களூரிலும் மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் செல்லும் வரையிலும், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மருத்துவமனையில் 8 பேர் கொண்ட மருத்துவகுழுவினர் மூலம் 2 வயது குழந்தைக்கு இதயம் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.