பலத்த சத்தத்துடன் விழுந்து நொறுங்கிய.. மிக்-21 போர் விமானம்! பொதுமக்கள் இருவர் பலி! ராஜஸ்தானில் ஷாக்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக்-21 எனும் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிர் பிழைத்ததாகவும், பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய விமானப்படையில் இருக்கும் மிகவும் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் இந்த MiG-21 ஜெட் விமானமும் ஒன்று. மணிக்கு சுமார் 2,229 கி.மீ வேகத்தில் பறக்கும் இந்த 2ம் தலைமுறை விமானமானது தற்போதைய 5ம் தலைமுறை விமானத்திற்கு கூட சவால் விடக்கூடியதாகும். சோவியத் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்த விமானம் தற்போதும் பயன்பாட்டில் இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த விமானத்தை இரண்டு நாடுகள்தான் பயன்படுத்துகின்றன. ஒன்று ரஷ்யா மற்றொன்று இந்தியா.

இந்நிலையில் இன்று இந்த விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது இந்த விமானம் இன்று காலை சூரத்கரிலிருந்து புறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் பொதுக்கள் வசிக்கும் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்ததாகவும், விமானி அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக போர் விமானங்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தானின் பரத்பூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய் சு-30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்தில் சிக்கியது. இதில் ஒரு விமானி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த இரண்டு விமானங்களும் மிகவும் சக்திவாய்ந்த விமானங்களாகும். இந்த போர் விமானமும் ரஷ்யாவிடமிருந்து வாங்கியதுதான். ஆனால் இது இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பின்நாட்களில் ரஷ்யாவுடன் இணைந்து தனித்துவமிக்க இந்திய சூழலுக்கு ஏற்ற சுகோய் போர் விமானங்களை தயாரித்தது.
இதன் வேகம் மணிக்கு 2,200. மற்ற விமானங்களை ஒப்பிடும்போது வேகம் குறைவாக இருந்தாலும் கூட, இதில் மற்ற விமானங்களை விட சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. இதன் ரேடார் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். அதேபோல சூப்பர் சோனிக் ஏவுகணையான பிரமோஸ் ஏவுகணையை கொண்டு செல்லும் திறன் பெற்றதாகும். இந்தியாவிடம் மொத்தம் 260 சுகோய் விமானங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல மற்றொரு சக்தி வாய்ந்த போர் விமானம் மிராஜ் 2000. மணிக்கு 2,400 கி.மீ வேகத்தில் பறக்க வல்ல இந்த விமானம் 4ம் தலைமுறை விமானமாகும். ஒற்றை என்ஜின் கொண்டிருந்தாலும் இதன் செயல்திறன் அசர வைக்கும்.
ரஃபேல் விமானத்தை தயாரித்த டசால்ட் நிறுவனம்தான் இந்த மிராஜ் ரக விமானத்தையும் தயாரித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது 9 நாடுகளில் இந்த போர் விமானம் பயன்பாட்டில் இருக்கிறது. ஒரேயொரு மிராஜ் ரக விமானத்தின் விலை மட்டும் ரூ.133 கோடியாகும். இந்த விமானமும் கடந்த ஜனவரியில் ராஜஸ்தானின் பரத்பூரில் விழுந்து நொறுங்கியது. அதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் இந்திய விமானபடைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. அதேபோல கடந்த மாதம் கொச்சியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. கடந்த ஆண்டு இறுதியில் அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகில் சீட்டா ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இப்படியான தொடர் விபத்துக்கள் இந்திய விமானப்படையில் சலசலப்பை ஏற்படுத்தியள்ளது.












Click it and Unblock the Notifications