மன்மோகன்சிங்குக்கு தவறான தகவல்களையே தெரிவித்து வந்தார் ஆ.ராசா: டெல்லி கோர்ட்டில் சி.பி.ஐ. புகார்!!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தெரிவிப்பதை முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா வழக்கமாகக் கொண்டிருந்தார் என்று டெல்லி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது.
ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கின் இறுதி வாதங்கள் டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய விசாரணையின் போது சி.பி.ஐ. வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் முன்வைத்த வாதம்:
அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் பற்றி அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தவறான தகவல்களை அளித்து வருவதை ராசா வழக்கமாகக் கொண்டிருந்தார். ராசாவுக்கு அப்போதைய பிரதமர் எழுதிய கடிதத்தில்கூட அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெளிப்படையாக நடத்தும்படி அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், நடைமுறையில் ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட விவரங்களுக்கு முரணாக பிரதமருக்கு ராசா பதில் கடிதம் எழுதியிருந்தார். இதன் மூலம், தான் செய்வது தவறு என்பதை அறிந்தே அவர் செயல்பட்டுள்ளார்.
மேலும், அலைக்கற்றை கோரும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்கும் தேதியை முதலில் 2007, அக்டோபர் 10 என்பதற்கு பதிலாக அக்போடர் 1 எனவும், 2வதாக 2007, அக்டோபர் 1 என்பதற்குப் பதிலாக 2007, செப்டம்பர் 25 எனவும் ராசா திருத்தினார்.
இதைத் தொடர்ந்து அலைக்கற்றை உரிமம் கோரி செப்டம்பர் 24-ந் தேதி வரை 167 விண்ணப்பங்களும், அக்டோபர் 1 வரை மொத்தம் 575 விண்ணப்பங்கள் வந்தன.
ராசா தனது பேனாவால் மேற்கொண்ட ஒற்றை திருத்தத்தால் மொத்தம் வந்த 575 விண்ணப்பங்களில் 408 விண்ணப்பங்கள் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற தகுதியற்றதாகக் கருதப்பட்டன
இவ்வாறு ஆனந்த் குரோவர் வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து ராசாவின் நடவடிக்கை தொடர்பாக வாதங்களை முன்வைக்க ஆனந்த் குரோவர் அனுமதி கேட்டார். இதை ஏற்றுக் கொண்ட சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி, இன்றும் வாதத்தைத் தொடர அனுமதி அளித்து வழக்கை ஒத்திவைத்தார்.