பற்றி எரிந்த தலைமைச் செயலகம்.. அலறியடித்து ஓடிய அரசு ஊழியர்கள்! மத்தியப் பிரதேசத்தில் ஷாக்
போபால்: மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அம்மாநில தலைமை செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைமை செயலகத்தின் மூன்றாவது மாடியில் தீ கொழுந்துவிட்டு எரிந்திருக்கிறது. காலை 8 மணியளவில் கட்டிடத்திலிருந்து கருகிய வாடை வருவதை சில பணியாளர்கள் உணர்ந்திருக்கின்றனர். வாடை எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிப்பதற்குள் கட்டிடம் முழுவதும் புகை சூழ தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

பின்னர் காலை 9.30 மணியளவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
இது குறித்து போபால் மாநகராட்சியின் தீயணைப்பு துறை அதிகாரி ராமேஷ்வர் நீல் கூறுகையில், “15-20 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க பயன்படுத்தியுள்ளோம். தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கட்டிடத்தின் உள்ளே யாரும் இல்லை என்பதை உறுதி செய்திருக்கிறோம். ஆவணங்கள் மட்டும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன” என்று கூறியுள்ளார்.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மின்கசிவு காரணமாக தீ பரவியதா? அல்லது யாரேனும் வேண்டும் என்றே தீ வைத்தார்களா? என்கிற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications