ஈவு இரக்கமற்ற கொலைகள்.. 113 குற்றச் செயல்கள்.. போலீஸ் பிடியில் சிக்கினார் 62 வயது "மம்மி"
டெல்லியைக் கலக்கி வந்த 62 வயதான பெண் தாதா பசிரான் நேற்று சங்கம் விஹாரில் டெல்லி போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: டெல்லி கேங்க்ஸ்டர்களால் அம்மா என்று அழைக்கப்பட்ட 62 வயதான பெண் தாதா ஒருவர் நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது 113 குற்ற வழக்குகள் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
சினிமாவை மிஞ்சும்படியாக 113 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒரு பெண் தாதா.. அவருடைய கேங் அடி ஆட்கள் அவரை அம்மா என்று அழைப்பதும் சினிமா அல்ல நிஜத்தில்தான் நடக்கிறது. இது வேறு எங்கும் இல்லை நமது நாட்டின் தலைநகர் டெல்லியில்தான் இப்படி ஒரு லேடி தாதா இருந்திருக்கிறார்.
டெல்லி போலீஸார் அண்மையில் டெல்லியில் முதல் ஐந்து பெண் தாதாக்களின் பட்டியலை தயார் செய்துள்ளது. அந்த ஐந்து பெண் தாதாக்களில் ஒருவர்தான் பசிரான்.
பசிரான் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்விகமாகக் கொண்டவர். இவர் டெல்லியில் குடியேறிய பிறகு எல்லாமே ஏறுமுகம்தான். இந்த லேடி தாதா பசிரானுக்கு 8 மகன்கள். அந்த 8 பேரையும் தனது ரவுடி தொழிலில் இறக்கிவிட்டுள்ளார். இவருக்கு என்று தனியாக ஒரு ரவுடி பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இவருடைய கேங் அடியாட்கள் அவரை அம்மா என்று அழைக்கும் அளவுக்கு செல்வாக்கு மிக்கவராக இருந்துள்ளார்.
பசிரான் தன்னுடைய மகன்களையும் ரவுடிகளாக வளர்த்துவிட்டு பணத்துக்காக கூலிப்படைகளை ஏவி கொலை செய்வது, கொள்ளை, சங்கிலி பறிப்பு, கள்ளச்சந்தையில் மதுபாணம் விற்பது, கள்ளச்சாரயம் விற்பது என எல்லா குற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்துள்ளார்.
இப்படி பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பசிரான் கேங் ஆட்கள் 8 மாதங்களுக்கு முன்பு கூலிப்படையாக செயல்பட்டு பணத்துக்காக ஒருவரை கொலை செய்துள்ளனர். கொலையானவரின் உடலை ஒரு காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று எரித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் காட்டுக்கு சென்ற யாரோ ஒருவர் அங்கே எரிந்த நிலையில் கிடந்த சடலத்தைப் பார்த்துவிட்டு போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த கொலையில் துப்பு துலக்கிய போலீஸார் கொலையில் தொடர்புடையவர்களை கைது செய்தது. ஆனால், பசிரான் மட்டும் தலைமறைவாக இருந்துவந்தார்.
இந்நிலையில், பசிரான் சங்கம் விஹார் பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் டெல்லி போலிஸார் விரைந்து சென்று பசிரானைக் கைது செய்தனர்.
போலீஸார் சங்கம் விஹார் சென்ற பிறகுதான் அவர்களுக்கு இன்னொரு தகவலும் தெரியவந்துள்ளது. அது என்னவென்றால், சங்கம் விஹாரில் உள்ள பல பொது போர்வெல் குழாய்களை பசிரான் ஆக்கிரமித்து அதிலிருந்து தண்ணீர் எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தொழிலையும் செய்து வந்துள்ள்ளார்.
கடந்த 45 ஆண்டுகளாக பல குற்றங்களை செய்து டெல்லியைக் கலக்கி வந்த பசிரான் லேடி தாதா நேற்று போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அவருடைய கேங் ஆட்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.