ஆதார் தகவல்களை சூப்பர் கம்யூட்டரால் கூட திருட முடியாது : தலைமை அதிகாரி சுப்ரீம் கோர்ட்டில் உறுதி
உலகின் எந்த ஒரு சூப்பர் கம்யூட்டராலும் ஆதார் தகவல்களைத் திருட முடியாது என்று தனித்துவ அடையாள ஆணைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெல்லி : உலகின் எந்த ஒரு சூப்பர் கம்யூட்டராலும் ஆதார் தகவல்களைத் திருட முடியாத அளவுக்கு அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தகவல்கள் பாதுகாக்கப்படுவதாக தனித்துவ அடையாள ஆணையத் தலைமை அதிகாரி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டைக்காக மக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் பாதுகாப்புத் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜராகிய ஆதார் தனித்துவ அடையாள ஆணையத் தலைமை அதிகாரி அஜய் பூஷண் பாண்டே 'பவர் பாயிண்ட் பிரசண்டேஷன்' உதவியுடன் ஆதார் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஆதார் அட்டைக்காகப் பெறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் அதிநவீன என்கிரிப்ஷன் தொழில்நுட்பத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அதனை உலகின் எந்த ஒரு சூப்பர் கம்யூட்டரும் ஊடுருவித் திருடமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல்கள் இணையதளத்துடன் இணைக்கப்படவில்லை என்றும், ஒரு யுகமே ஆனாலும் இந்தத் தகவல்கள் வெளியே கசிவதற்கு வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆதாரில் பெறப்பட்டுள்ள பயோ மெட்ரிக் அடையாளங்கள் சிலருக்கு காலப்போக்கில் மாறும் தன்மை உடையதால், அதனை கண்டுபிடிக்கவும் சில தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது என்றும் அஜய் பூஷண் பாண்டே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications