டெல்லியில் குடிநீர் கட்டணம் 10% அதிரடி உயர்வு; பா.ஜ.க.- காங். கண்டனம்!!
டெல்லி: டெல்லியில் இலவச குடிநீர் வழங்கப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்த ஒரு மாதத்துக்குள் 10% குடிநீர் கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாரதிய ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதி குடிநீர்க் கட்டணத்தை 10% உயர்த்துவதற்கான முன்மொழிதலுக்கு டெல்லி குடிநீர் வாரியம் ஒப்புதல் பெற்றிருந்தது.
ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், "மாதம் 20,000 லிட்டர் இலவச குடிநீர் வழங்கப்படும்" என்று ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில் டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி அரசு, மாதந்தோறும் 20ஆயிரம் லிட்டர் குடிநீர் பயன்படுத்தும் நுகர்வோருக்கு 50% கட்டணம் குறைக்கப்படும் என கடந்த மாதம் 25-ந் தேதி அறிவித்திருந்தது.
இதனிடையே டெல்லியில் தலைநகரில் குடிநீர்க் கட்டணம் 10% அதிகரிக்கப்படுகிறது என்று டெல்லி அரசு நேற்று அதிரடியாக அறிவித்தது.
இலவச குடிநீர் வழங்குவதாக டெல்லி அரசு அறிவித்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மாதம் 20 ஆயிரம் லிட்டருக்கு கீழ் குடிநீரைப் பயன்படுத்துவோர் இந்த கட்டண உயர்வால் பாதிக்கப்படமாட்டார்கள் என்று டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி குடிநீர் வாரியத்தின் 121-வது கூட்டம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் குடிநீர் கட்டணத்தை 10% உடனடியாக உயர்த்த வேண்டும் என்று வாரியம் தமது பரிந்துரையை சமர்ப்பித்தது.
இந்தப் பரிந்துரைக்கு துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஒப்புதல் அளித்தார். மேலும் அங்கீகாரமற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த பெறப்படும் கட்டணம், ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 3,310 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்வேறு பகுதிகளில் உள்ள அங்கீகாரமற்ற குடிநீர் இணைப்புகளை எளிதில் முறைப்படுத்தலாம். டெல்லி குடிநீர் வாரியத்துக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய 250 லாரிகள் வாங்குவது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு டெல்லி அரசு விரைவில் ஒப்புதல் அளித்து புதிய லாரிகள் வாங்க நடவடிக்கை எடுக்க இருக்கிறது.
இலவச குடிநீர் வழங்குவதாக கூறிவிட்டு குடிநீர் கட்டணத்தை ஆம் ஆத்மி அரசு உயர்த்தி இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் என்று பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.