ஆம் ஆத்மி வேட்பாளர் சவிதா பாத்தி லோக்சபா தேர்தலில் இருந்து விலக முடிவு
சண்டிகார்: லோக்சபா தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை என ஆம் ஆத்மியின் சண்டிகார் வேட்பாளாரான காமெடி நடிகை சவிதா பாத்தி தனது கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சி ஆரம்பித்த ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சி அமைக்கும் அளவிற்கு மக்களிடையே ஆதரவைப் பெற்றது ஆம் ஆத்மி கட்சி. தற்போது நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து அக்கட்சி முனைப்பாகச் செயல் பட்டு வருகிறது.
அதன்படி லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ள தனது கட்சி வேட்பாளர்கள் பெயர்களை அக்கட்சி வெளியிட்டது. ஆனால், அதில் திடீர் திருப்பமாக ஆம் ஆத்மி வேட்பாளர் சவிதா பாத்தி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிகிறது.
தனது சொந்த பிரச்சனை காரணமாக போட்டியிடுவதிலிருந்து திரும்ப பெறுவதாக சவிதா பாத்தி ஆம் ஆத்மி தலைமையிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்படவில்லை.
எனவே, இது தொடர்பாக சவிதாவுடன் செய்தியாளர்கள் பேச முயற்சித்தபோது அவருடைய செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குடும்ப சூழல் காரணமாக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தகவல் வெளியானாலும், உண்மையில் அவரது தொகுதி ஆம் ஆத்மி தலைவர்கள் சவிதாவுக்கு முழு ஆதரவு அளிக்கவில்லை என்பதே உண்மை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, தான் போட்டியிடும் தொகுதியில் சவிதா பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பிறகே அவர் இவ்வாறான முடிவை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .