வைகோ வீட்டில் அறிமுகப்படுத்தியதும்! விஜய்க்கு திருஷ்டி கழித்த பணிப்பெண்! பதிலுக்கு முதல்வர் மாஸ்!
சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள தனது வீட்டிற்கு தமிழக முதல்வர் விஜய் வந்ததை அடுத்து அவரை தனது வீட்டு பணிப்பெண்களுக்கும் அறிமுகம் செய்து வைத்து போட்டோ எடுத்துக் கொள்ள வைத்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ! பணிப் பெண் ஒருவர் திருஷ்டி கழித்ததற்கு விஜய்யும் அந்த பெண்ணுக்கு திருஷ்டி கழித்தார்.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் நேற்று பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் அங்கிருந்து விஜய் தலைமைச் செயலகம் சென்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அங்கு கோப்புகளை பார்த்துவிட்டு மதியம் போல பெரியார் திடலுக்கு விஜய் சென்றார்.

அங்கு அவரை திக தலைவர் வீரமணி வரவேற்றார். மேலும் விஜய்க்கு அவர் வாழ்த்துகளையும் தெரிவித்தார். இதையடுத்து விஜய், பெரியாரின் சிலைக்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். பெரியார் அருங்காட்சியகத்தையும் முதல்வர் விஜய் பார்வையிட்டார்.
இதையடுத்து இன்று தமிழக சட்டசபை கூடியது. விஜய் உள்பட 233 எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து சபநாயகர் தேர்தலுக்கான மனுவை ஜேசிடி பிரபாகருடன் சென்று தாக்கல் செய்த விஜய், நேராக ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலினின் இல்லத்திற்கு சென்றிருந்தார்.

அங்கு அவரை உதயநிதியும் ஸ்டாலினும் ஆரத்தழுவி வரவேற்றனர். உடன் முன்னாள் அமைச்சர்கள் அன்பில், எம்ஆர்கே பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இருந்தனர். இதையடுத்து விஜய்யின் கான்வாய் அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கு வாசலுக்கே வந்து திருச்சி எம்பி துரை வைகோ வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். உள்ளே வைகோ, விஜய்யை பார்த்ததும் கட்டி அணைத்து அன்பை பொழிந்தார். மேலும் விஜய்க்கு சால்வை போர்த்தும் போதும் மாலை அணிவித்த போது வைகோவுக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை என்பதை போல் பரபரப்பாகவே இருந்தார்.

தனது கட்சி நிர்வாகிகளை விஜய்க்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது வீட்டுப் பெண்களை விஜய்க்கு வைகோ அறிமுகப்படுத்தினார். அப்போது அவர்களில் ஒரு பெண் துள்ளி குதித்துக் கொண்டு விஜய்க்கு திருஷ்டி கழித்தார். பதிலுக்கு விஜய்யும் அந்த பெண்ணுக்கு திருஷ்டி கழித்தார். பணிப்பெண்களை விஜய்யுடன் வைகோ நிற்க வைத்து போட்டோ எடுக்க வைத்ததால் அந்த பெண்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். பின்னர் விஜய்யை வாசல் வரை போய் வைகோ வழியனுப்பினார். அங்கிருந்த மக்களுக்கு இருவரும் சேர்ந்து கையசைத்து மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.

இதையடுத்து நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணியின் வீட்டிற்கு விஜய் சென்றார். அங்கு வாசல் வரை வந்த அன்புமணியும் சவுமியாவும் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு அன்புமணியின் மகள்கள், மாப்பிள்ளைகள் பேர குழந்தைகள் இருந்தனர். விஜய்யுடன் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர். இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டிற்கும் விஜய் சென்றார்.
விஜய்யை வாசலில் நின்ற சீமான் ஆரத்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். இப்படியாக அரசியல் நாகரீகம் கருதி மூத்த அரசியல்வாதிகளை முதல்வர் விஜய் சந்தித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications