6 மாநிலங்களில் ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு பறிபோனது- கருத்து கணிப்பு
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் 6 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு கணிசமாக குறைந்துள்ளது என்று சி.என்.என்.- லோக்நிதி- சி.எஸ்.டி.எஸ். கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
ஆம் ஆத்மியின் செல்வாக்கு தொடர்பாக சி.என்.என்.- லோக்நிதி- சி.எஸ்.டி.எஸ்., தமிழகம், ஆந்திரா, பீகார், உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கருத்து கணிப்பை நடத்தியது.
இக்கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ள முடிவுகள் விவரம்:
டெல்லியில் செம சரிவு
டெல்லியில் ஜனவரி மாதம் ஆம் ஆத்மிக்கான ஆதரவு 48% இருந்தது. கடந்த 2 மாதத்தில் இது 35% ஆக குறைந்துபோய்விட்டதாம்.
உ.பி, மகாராஷ்டிராவில் சமநிலை
ஆனால் உத்தப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் ஆம் ஆத்மியின் ஆதரவு 5% என்ற நிலையிலேயே நீடிக்கிறது.
தமிழகத்தில் சரிவு
பீகார், தமிழகம், ஆந்திர மாநிலத்தில் கணிசமான அளவு ஆம் ஆத்மிக்கு இருந்த செல்வாக்கு சரிந்துள்ளது. பீகார், தமிழகத்தில் 3% ஆதரவு இருந்த ஆம் ஆத்மிக்கு தற்போது 2%தான் ஆதரவு.
ஆந்திராவிலும் அடி
ஆந்திர மாநிலத்தில் 2% ஆதரவு இருந்தது. இது தற்போது பாதிக்கு பாதியாக குறைந்துபோய் 1% என்ற அளவில்தான் இருக்கிறது.
கேஜ்ரிவால் பிரதமராக..
இந்த 6 மாநிலங்களில் நாட்டின் அடுத்த பிரதமராக கேஜ்ரிவால் வருவதற்கு 4% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில்..
ஆனாலும் தமிழகத்தில் கேஜ்ரிவால் பிரதமராக எவருமே ஆதரவு தெரிவிக்கவில்லை என்கிறது கருத்து கணிப்பு. டெல்லியிலும் கூட கேஜ்ரிவால் பிரதமராக ஜனவரி மாதம் 34% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இது பிப்ரவரி மாதம் 26% ஆக குறைந்தும் போய்விட்டது.
மோடிக்குத்தான் அதிக ஆதரவு
கருத்து கணிப்பு நடத்தப்பட்ட 6 மாநிலங்களில் சராசரியாக 39% பேர் மோடி, பிரதமராக ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதற்கு அடுத்து 17% பேர் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பாஜகவுக்கும் அடி
மேலும் 6 மாநிலங்களில் ஜனவரி மாதம் பாஜகவுக்கு ஆதரவளிப்போம் என்று கூறியவர்கள் 12%. இப்போது இது 7% ஆக குறைந்துள்ளது. அதே நேரத்தில் வட இந்திய மாநிலங்களில் இந்த வாக்குகள் பகுஜன் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு திரும்பியுள்ளது.