17 வங்கிகளில் கூடுதலாக ரூ 3000 கோடியையும் ஏப்பம் விட்ட நீரவ் மோடி... அதிர்ச்சி தகவல்
17 வங்கிகளில் நீரவ் மோடிக்கு சொந்தமான நிறுவனங்கள் ரூ.3000 கோடி கடன் பெற்றுள்ளதாக அமலாக்கத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டுமல்லாது 17 வங்கிகளில் கூடுதலாக ரூ.3000 கோடி நிதியை நீரவ் மோடியின் நிறுவனங்கள் கடன் பெற்றுள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் வெளிவந்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடிசர்வதேச வங்கிக் கிளைகளில் கடனீட்டு பத்திரங்களின் மூலம் ரூ 11,400 கோடி கடன் பெற்றுவிட்டு ஏமாற்றியது தெரியவந்துள்ளது.
இதை புதிதாக பொறுப்பேற்ற வங்கி அதிகாரி ஒருவர் கண்டறிந்தார். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தவுடன் நீரவ் மோடி தலைமறைவாகி வெளிநாட்டுக்கு தப்பிசென்றுவிட்டார்.

3 கடைகளில் விசாரணை
இந்நிலையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கின்பேரில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று சென்னையில் நீரவ் மோடிக்கு தொடர்புடைய 3 பிரபல நகைக் கடைகளில் விசாரணை நடத்தினர்.

நீரவ் மோடியின் நிறுவனங்கள்
மேலும் நாடு முழுவதும் 21 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் அமலாக்கத் துறை அதிர்ச்சி கலந்து தகவலை தெரிவித்துள்ளது. அதாவது நீரவ் மோடியின் நிறுவனங்கள் 17 வங்கிகளில் கூடுதலாக ரூ.3000 கோடி கடன் பெற்றது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள்
இதுதொடர்பாக அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனையின் போது அவரது உறவினருக்கு சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் தொழில் நிமித்தமாக எந்த ஒரு பணபரிமாற்றமும் செய்யக் கூடாது என்று நியூ யார்க், லண்டன், மாக்கா, பீஜிங் ஆகிய இடங்களில் உள்ள நீரவ் நிறுவனங்களுக்கு அமலாக்கத் துறை உத்தரவிட்டுள்ளது.

4,887 கோடி நஷ்டம்
6 மாநிலங்களில் உள்ள நீரவ் மோடியின் உறவினர் மேகுல் சோக்ஷிக்கு சொந்தமான கீதாஞ்சலி குரூப் ஆஃப் கம்பெனிகளின் பல்வேறு சொத்துகள் குறித்து 26 இடங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. அவை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ. 4,887 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறி மற்றொரு வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது. அவை கீதாஞ்சலி ஜெம்ஸ். கிலி இந்தியா மற்றும் நக்ஷத்ரா பிராண்ட்ஸ் லிமிடெட் ஆகும்.

150 ஷெல் நிறுவனங்கள் அடையாளம்
நீரவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது நிறுவனங்களுக்கு சொந்தமான 29 சொத்துகள் மற்றும் 105 வங்கிக் கணக்குகளை வருமான வரித் துறை முடக்கியது. வருமான வரி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி விசாரணை நடைபெறுகிறது. நீரவ் மற்றும்சோக்ஷியின் பாஸ்போர்ட்கள் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் 150 ஷெல் நிறுவனங்களை விசாரணை நடத்துவதற்காக கண்டறிந்துள்ளது.












Click it and Unblock the Notifications