ஹைகோர்ட் தீர்ப்பு பற்றி ஜெ. தரப்பு வாதிடாதது ஏன்? சுப்ரீம்கோர்ட்டில் ஆச்சாரியா கேள்வி
டெல்லி: ஹைகோர்ட் தீர்ப்பில் உள்ள பல தவறுகளில் ஏதாவது ஒன்றை விசாரித்தால் கூட, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி என்று கர்நாடக தரப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா வாதிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் விடுதலைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடந்து வருகிறது.
நேற்றைய விசாரணையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தரப்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே தனது வாதங்களை தொடர்ந்தார்.
ஆச்சாரியா வாதம்
இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு தரப்பு பதில் வாதங்களை 2வது சுற்றாக முன்வைக்குமாறு கர்நாடக அரசு வக்கீல் பி.வி.ஆச்சார்யாவை நீதிபதிகள் அழைத்தனர்.
ஹைகோர்ட் தீர்ப்பு பற்றி பேசவில்லை
அவர் தன்னுடைய வாதத்தில் கூறியதாவது: கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பில் உள்ள பல தவறுகளை சுட்டிக்காட்டினோம். குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஹைகோர்ட்டு தீர்ப்பை பற்றி ஒரு வார்த்தை கூட எங்கும் கூறவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக கீழ்க்கோர்ட்டின் தீர்ப்பை பற்றி மட்டுமே குறைகூறி வந்தனர்.
தண்டனை உறுதி
ஹைகோர்ட் தீர்ப்பில் உள்ள பல தவறுகளில் ஏதாவது ஒன்றை விசாரித்தால் கூட, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதி. ஹைகோர்ட் தீர்ப்பில் கணக்குப் பிழை உள்ளிட்ட எந்த குறையை பற்றியும் அவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை கூற முன்வரவில்லை. ஹைகோர்ட்டு தீர்ப்பை சரியானது என்று அவர்கள் எங்கும் கூறவில்லை. இதில் இருந்தே ஹைகோர்ட் தீர்ப்பில் தவறு உள்ளது என்பது தெரியவருகிறது.
குளறுபடிகள்
கர்நாடக ஹைகோர்ட்டு தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளன. ரூ.24 கோடி கடன் தொகையை வருவாயாக தீர்ப்பில் கணக்கு காட்டப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்பே ஹைகோர்ட்டில் எங்கள் தரப்பு வாதத்தை முன்வைக்க அனுமதிக்கப்பட்டது.
எழுத்து மட்டுமே
ஆனால் போதிய கால அவகாசம் இல்லாததால் எங்களால் விரிவான முறையில் வாதத்தை முன்வைக்க முடியவில்லை. அரசு தரப்பில் எழுத்துபூர்வ வாதத்தை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதையும்கூட, ஹைகோர்ட்டு தன்னுடைய தீர்ப்பில் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.
குறுக்கிட்ட நீதிபதிகள்
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், இந்த கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க தொடங்கிய போதே நீங்கள் ஹைகோர்ட்டு தீர்ப்பு குறித்து கேள்வி எழுப்பியிருக்கலாமே என்று கேட்டனர். தொடர்ந்து நீதிபதிகள் கூறும்போது, ஆரம்பத்திலேயே நாங்கள் சொன்னதுபோல இந்த வழக்கு முற்றிலும் வித்தியாசமானது. அதனால் தான் இந்த வழக்கில் அனைத்து தரப்பினரும் விரிவான வாதத்தை முன்வைக்க தேவையான காலம் வழங்கப்படுகிறது என்று கூறினர்.
விசாரணை இன்றும் தொடருகிறது.