வருது தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு.. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கே அதிமுக, இரட்டை இலை சின்னம்?
ஐக்கிய ஜனதா தள் விவகாரத்தைப் போல விரைவில் அதிமுக, இரட்டை இலை சின்னம் பிரச்சனையிலும் தேர்தல் ஆணையம் விரைவில் தீர்ப்பளிக்கும்.
டெல்லி: நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள் அணியே உண்மையான கட்சி என தேர்தல் ஆணையம் அதிரடி தீர்ப்பளித்தது. இதேபோல் அதிமுக, இரட்டை இலை சின்ன விவகாரத்திலும் தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் தீர்ப்பளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவை கைப்பற்றுவதற்கு சசிகலா தரப்பு ரொம்பவே தீவிரமாக முயற்சித்தது. முடக்கப்பட்ட அதிமுக பெயர், இரட்டை இலை சின்னத்தை மீட்க தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தினகரன் கைது செய்யப்பட்டு திஹார் சிறைக்கும் போய் திரும்பியிருக்கிறார்.
முடக்க கோரும் தினகரன்
அதிமுகவில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் அவர்களுக்கே அதிமுக, இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணையில் கூட தங்களுக்கு சின்னம் கிடைக்காது என்பதால் இரட்டை இலையை முடக்க கோரிக்கை வைத்தது தினகரன் தரப்பு.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அதேபோல் தேர்தல் ஆணைய விசாரணையை இழுத்தடிக்கவும் முயற்சித்தது தினகரன் தரப்பு. ஆனால் தேர்தல் ஆணையமோ விசாரணையை நிறைவு செய்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருக்கிறது.
தேர்தல் ஆணையம் அதிரடி
இந்நிலையில் ஐக்கிய ஜனதா தள் கட்சிக்கு உரிமை கோரி பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் சரத் யாதவும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து இன்று தேர்தல் ஆணையம் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. அதில், கட்சியில் பெரும்பான்மை பலம் நிதிஷ்குமார் அணிக்கே இருக்கிறது; ஆகையால் அந்த அணிக்கே ஐக்கிய ஜனதா தள் கட்சி பெயரும் அதன் அம்பு சின்னமும் ஒதுக்கப்படும் என தீர்ப்பளித்திருக்கிறது.
பேரிடி காத்திருக்கிறது?
இதனடிப்படையில்தான் எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளை அதிகம் வைத்திருக்கும் ஓபிஎஸ்-ஈபிஎஸ் அணிக்கே அதிமுக கட்சி பெயரும் இரட்டை இலை சின்னமும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே அடுத்தடுத்த வழக்குகளில் சசிகலா குடும்பம் சிறைக்கு போய்வரும் நிலையில் அடுத்த பேரிடியாக தேர்தல் ஆணையத்தின் முடிவு இருக்கப் போகிறது என்பதைத்தான் இன்றைய தீர்ப்பும் சுட்டிக்காட்டுகிறது.