59 ஆண்டு ஆயுதப் போர் ஓவர்! 550 மாஜி 'தீவிரவாதிகள்' மணிப்பூர் முதல்வர் முன்பாக பிரம்மாண்ட அணிவகுப்பு!
இம்பால்: மணிப்பூரில் 59 ஆண்டுகாலம் ஆயுதப் போராட்டம் நடத்தி வந்த ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற யுஎன்எல்எப்- UNLF இயக்கத்தின் 550 போராளிகள் அம்மாநில முதல்வர் பைரேன் சிங் முன்னிலையில் ஆயுதங்களைக் கைவிட்டு ஜனநாயகப் பாதையில் திரும்பினர்.
மணிப்பூரின் மிகப் பழமையான ஆயுதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (யு.என்.எல்.எஃப்), மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசுடன் கடந்த நவம்பர் 29-ந் தேதி டெல்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மணிப்பூர் அரசின் மூத்த அதிகாரிகளும், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளும் புதுதில்லியில் கையெழுத்திட்டனர்.

1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட யூ.என்.எல்.எஃப் இந்திய எல்லைக்கு உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தம் வடகிழக்குப் பகுதியில் குறிப்பாக மணிப்பூரில் அமைதி நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் இது ஒரு மைல்கல் சாதனை என்று கூறியுள்ளார். ஜனநாயக செயல்முறைகளுக்கு யூ.என்.எல்.எஃப் அமைப்பு மாறுவது வரவேற்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார். சமாதானம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் அவர்கள் மேற்கொள்ளும் பயணத்திற்கு வாழ்த்துகளை தெரிவிப்பதாகவும் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

வடக்கு மாநிலங்களில் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பல ஆயுதக் குழுக்களுடன் மத்திய அரசு 2014-ம் ஆண்டு முதல் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. பல்வேறு ஆயுதக் குழுக்களுடன் அரசியல் தீர்வுகள் இறுதி செய்யப்பட்டிருந்தாலும், மணிப்பூர் பள்ளத்தாக்கை தளமாகக் கொண்ட மணிப்பூரி ஆயுதக் குழு வன்முறையைக் கைவிட்டு, பிரதான நீரோட்டத்திற்குத் திரும்ப ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும். இந்த உடன்படிக்கையின் மூலம் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவிய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். அத்துடன் மாநிலத்தில் அமைதி மற்றும் இயல்புநிலையை கொண்டு வருவதில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக திகழும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் மாநிலத்தின் புகழ்பெற்ற கங்லா கோட்டையில் ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற யுஎன்எல்எப்- UNLF இயக்க போராளிகள் தங்களது சீருடையுடன் அணிவகுப்பு நடத்தி சீருடையை களைந்து ஜனநாயகப் பாதைக்கு திரும்பினர். இந்த நிகழ்வில் மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications