மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் பாஜக.. அக்னிபாத் திட்டத்தால் கொதித்தெழுந்த மம்தா! கடும் சாடல்
கொல்கத்தா: ‛‛அக்னிபாத் திட்டம் மூலம் பாஜக தனக்கென சொந்தமாக ஆயுதப்படையை உருவாக்க முயற்சிக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறியவர்கள் 2024 மக்களை தேர்தலுக்கு முன்பே அக்னிபாத் திட்டம் மூலம் மக்களை ஏமாற்றி முட்டாளாக்க முயற்சிக்கின்றனர்'' என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
பீகார், உத்தர பிரதேசம், தெலங்கானா செகந்திரபாத் உள்பட பல இடங்களில் போராட்டம் வன்முறையானது. ரயில்களுக்கு தீவைக்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

அக்னிவீரர்களுக்கு சலுகை
இத்திட்டத்தை கைவிட வேண்டும் என இளைஞர்கள் கூறியதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இருப்பினும் முதல் பேட்ஜ்க்கான வயது வரம்பில் சலுகை, மத்திய பாதுகாப்பு துறை மற்றும் உள்துறையில் மட்டும் அக்னிவீரர்களுக்கு தலா 10 சதவீத இடஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திட்டத்தை திரும்பபெறப்போவது இல்லை என பாதுகாப்புத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபாத் திரும்ப பெற மறுப்பு
இதுபற்றி ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி நேற்று கூறுகையில்,‛‛ முப்படைகளுக்கான அக்னிபாத் திட்டத்துக்கான சீர்த்திருத்தம் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. ராணுவத்தில் அனுபவத்துடன், இளைஞர்களை இணைத்து இளமையாக வைக்க விரும்புகிறோம். இதற்காக தான் இந்த திட்டத்தை கொண்டு வரப்பட்டு உள்ளது. இத்திட்டம் திரும்ப பெறப்படாது'' என்றார். இதன்மூலம் அக்னிபாத் திட்டம் திரும்பெறாது என்பது உறுதியாகி உள்ளது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று பல இடங்களில் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

மம்தா பானர்ஜி விமர்சனம்
இந்நிலையில் தான் இத்திட்டத்தை பல்வேறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இதுபற்றி மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:
மத்திய பாஜக அரசு பாதுகாப்பு படையினரை அவமானப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. அக்னிவீரர்களை பாஜகவின் அலுவலகத்தில் செக்யூரிட்டியாக சேர்ப்பதாக கூறுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

மக்களை முட்டாளாக்க முயற்சி
அக்னிபாத் திட்டம் மூலம் பாஜக தனக்கென சொந்தமாக ஆயதப்படையை உருவாக்க விரும்புகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறியவர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். அக்னிபாத் திட்டம் என்பது 2024 தேர்தலுக்கு முன்பே மக்களை முட்டாளாக்க பார்க்கின்றனர். இந்த திட்டத்தில் 4 ஆண்டு பணிக்கு பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்?'' என விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications