ஏர் இந்தியா விமான விபத்து: பைலட்டின் இருக்கையில் தொழில்நுட்ப கோளாறு?.. மத்திய அரசு விளக்கம்
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று தகவல் பரவி வரும் நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமானம் தீயில் கருகிய நிலையில் அதில் பயணித்த 241 பேர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் 30க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். மற்றவர்கள் அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டு உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. டாடா நிறுவனம் நிறுவனம் சார்பில் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் கண்ணீர் கதைகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், நாளுக்கு நாள் விமான விபத்து குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்துக்கு பைலட்டின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. அந்த தகவலில் விமானம் ஓடுபாதையில் இருந்து வான் நோக்கி பறக்கத் தொடங்கியபோது பைலட்டின் இருக்கை லாக் ஆகாமல் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
இதையடுத்து, பைலட்டின் இருக்கை பின்னோக்கி நகர்ந்த நிலையில் கட்டுப்பாட்டு கருவியை விமானி கட்டுப்படுத்த முடியாமல் பின்னோக்கி இழுத்ததாகவும், அப்போது நடுவானில் விமானம் சீராக பயணிக்கும் ஐடில் நிலையை விமானம் அடைந்ததால், விமானத்தின் என்ஜினின் வேகம் உடனடியாக குறைந்ததாகவும், சக விமானி விமானத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்த நிலையில் அது தோல்வி அடைந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதுதொடர்பாக விமானி அறையில் விமானியும், சக விமானியும் பேசிய உரையாடல் கருப்பு பெட்டியில் பதிவாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்த தகவல் தவறானது என்று மத்திய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த தகவல் தவறானது. இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications