ஏர் இந்தியா விமான விபத்துக்கு இதுதான் காரணம்?.. புட்டு புட்டு வைத்த முன்னாள் பைலட்
அகமதாபாத்: அகமதாபாத்திலிருந்து லண்டன் கிளம்பிய விமானம் விபத்தில் சிக்கி சுமார் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக வெளியாகி வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து முன்னாள் பைலட் கெளரவ் தனேஜா வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி விடுதி வளாகத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

விமானம் தீயில் கருகிய நிலையில் அதில் பயணித்த 241 பேர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் 30க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 274 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார். மற்றவர்கள் அனைவரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டாடா நிறுவனம் நிறுவனம் சார்பில் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களின் கண்ணீர் கதைகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், விமான விபத்து குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், விமான விபத்துக்கான காரணம் அதிகளவிலான எடையாக இருக்கலாம் என்று முன்னாள் விமானி ஒருவர் தன்னுடைய யூடியூப் சேனல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல யூடியூபரான கௌரவ் தனேஜா ஏர்ஏசியா விமானத்தின் கேப்டனாக இருந்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சரக்கு விமானத்தின் பைலட்டாகப் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பரபரபப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த விமான விபத்து குறித்து கௌரவ் தனேஜா பேசுகையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்கு வழக்கத்தை விட அதிக அளவிலான நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளது.
இது ஃபிளைடே ரேடார் செயலியின் டேட்டா பேஸ் மூலமாக தெரியவந்துள்ளது. அதேசமயம் விமானம் கிளம்பியபோது ஓடுபாதையில் தூசு கிளம்பியுள்ளது. இதன் மூலம் அந்த ஓடுபாதை முறையாக பராமரிக்கப்படாதது, செப்பனிடப்படாதது தெரியவந்துள்ளது. அந்த விமானம் ஓடுபாதையில் அதிக நேரம் ஓடிய பின்னரே மேலே சென்றது.
பின்னர், படிப்படியாக விமானத்தின் வேகம் குறையத் தொடங்கியது. இதன் மூலம் விமானத்தில் பிரச்சனை இருப்பது தெளிவாகியுள்ளது. அப்படியானால் விமானத்தில் இருந்த அதிக எடை காரணமாக விமானம் மேலே செல்ல முடியாமல் சிக்கல் ஏற்பட்டதா. இதேபோல, 1993 ஆம் ஆண்டில் ஒளரங்காபாத்தில் அதிக எடை காரணமாக விபத்து ஏற்பட்டது.
பொதுவாக சரக்கு சேவைகளில் விமான நிறுவனங்களுக்கு அதிகளவிலான வருவாய் கிடைக்கின்றன. எனவே, விமானம் அதிக எடையின் காரணமாக விபத்துக்குள்ளாகி இருக்கலாம். ஆவணங்களில் மட்டுமே குறைவான சரக்குகள் என்று இருக்கும். ஆனால், விமான நிறுவனங்கள் அதிக அளவிலான எடையை விமானத்தில் ஏற்றுகின்றன.
மேலும், டெல்அவிவ் பகுதியில் இருந்து கிளம்பிய விமானம் சரக்குகளின் எடையை சரியாகப் பதிவு செய்யாததால் விபத்துக்குள்ளானது. எனவே, ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களுக்காக காத்திருக்கிறேன். விரைவில் அதனை வெளியிடுகிறேன் என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications