ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்த எம்பி மீது வழக்கு.. ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்கவும் தடை
விமானத்தில் ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: விமானத்தில் ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்கவும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்பி ரவீந்திர கெய்க்வார் ஏர் இந்தியா விமானத்தில் டெல்லிக்கு எப்போது வேண்டுமானாலும் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய டிக்கெட் எடுக்கப்பட்டுள்ளது. இவர் நேற்று காலை திடீரென புனேவில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனால் அதில் எல்லாம எகானமி வகுப்பை சேர்ந்த இருக்கையாக இருந்தது. இருப்பினும் அதிலேயே கெய்க்வாட் பயணம் செய்தார். டெல்லி விமான நிலையம் வந்தப் பிறகும் கூட விமானத்தில் இருந்து இறங்காமல் அதிலேயே அமர்ந்திருந்தார்.
சட்டையை கிழித்த எம்பி
இதுகுறித்து விமான நிலைய ஊழியர் ஏர் இந்தியா மேலாளரிடம் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த 60 வயதான ஏர் இந்தியா மேலாளர் சிவகுமார் எம்பியை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது வெறிபிடித்தது போல் மேலாளரரை அடித்து சட்டையை கிழித்தார் கெய்க்வாட்.
25 முறை செருப்பால் அடித்தார்
அவரது மூக்கு கண்ணாடியையும் அவர் அடித்து நொறுக்கினார். உச்சகட்டமாக அவரது செருப்பால் மேலாளரின் கன்னத்தில் மாறி மாறி 25 முறை அடித்தார். ஊழியரை எம்பி செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகளும் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
அடித்தேன் என திமிராக கூறிய எம்பி
இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு எம்பி கெய்க்வாட் ஆமாம், செருப்பால் அடித்தேன் என திமிராக கூறியுள்ளார். ஏர் இந்தியா ஊழியர்கள் தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதால் அடித்ததாக அவர் விளக்கமும் அளித்துள்ளார்.
தடைவிதித்தது ஏர் இந்தியா
இந்த சம்பவத்தையடுத்து ஏர் இந்தியா விமானங்களில் பயணம் செய்ய அந்த எம்பிக்கு அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.மேலும் அவரது அதிகார அத்துமீறல் குறித்து சிவசேனா தலைவர் உத்தாவ் தாக்கரே விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
எம்பி மீது வழக்குப்பதிவு
சிவசேனா எம்பி மீது காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் மேலாளரை சிவசேனா எம்பி ஒருவர் செருப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.