ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: தயாநிதி, கலாநிதி மாறனின் ரூ742 கோடி சொத்துகள் அதிரடி முடக்கம்
டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி, அவரது சகோதரரும் சன் குழும அதிபருமான கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிரடியாக முடக்கியுள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்தார்; இதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்தனர் என்பது சிபிஐ குற்றச்சாட்டு.

இந்த முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தயாநிதி, கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் கடந்த மாதம் 2-ந் தேதி டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இதன் பின்னர் இந்த வழக்கு ஆகஸ்ட் 3-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு அதிரடியாக முடக்கி உள்ளது. தற்போது முடக்கப்பட்டத்தில் சன் குழுமத்தின் பங்குகளும் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications