ஹமீது அன்சாரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மோடி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
கடந்த மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத் தொடரின் போது பல்வேறு பிரச்சினைகளை காங்கிரஸ் எழுப்பியதால் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் பல மசோதாக்கள் நிறைவேறாமல் போனது. இருப்பினும் விலைவாசி உயர்வு, வெள்ளம், வறட்சி நிலவரம் ஆகிய பிரச்சினைகள் தொடர்பாக சிறப்பாக விவாதம் மட்டும் நடைபெற்றது.

மாநிலங்களவையில் 9 மசோதாக்கள் நிறைவேறின. ஆனால் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டதால் அந்த மசோதா நிறைவேறவில்லை.அதே சமயம் சிறார் நீதி மசோதா விவகாரத்தில் இடதுசாரி கட்சிகள் தவிர மற்ற கட்சிகள் ஒன்றுபட்டதால் மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேறியது.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 23ம் தேதி துவங்க உள்ளது. இதனை சுமூகமாக நடத்துவது குறித்து கடந்த 1ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வரும் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது தொடர்பாக மாநிலங்களவை அனைத்துக் கட்சி கூட்டம் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் மாநிலங்களவை தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஹைதரபாத் தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்..












Click it and Unblock the Notifications